ரஷியாவில் தமிழ் புத்தகங்களை ரசித்து வாங்குகிறார்கள்!
புத்தகம் படிப்பது இன்று குறைந்து வருகிறது என்பது ஒரு சாராரின் கருத்து. புத்தகத்தை எடுக்கிற தூரத்தில் வைத்தால்,
புத்தகம் படிப்பது இன்று குறைந்து வருகிறது என்பது ஒரு சாராரின் கருத்து. புத்தகத்தை எடுக்கிற தூரத்தில் வைத்தால், அவர்களை படிக்க வைக்கலாம் என்பது சிலரது எண்ணம். அதில் உடன்பாடு உடையவர்தான் ரவி தமிழ்வாணன். மணிமேகலை பிரசுரத்தின் அதிபர். லேனா தமிழ்வாணனின் சகோதரர். அண்மையில் ரஷ்யாவுக்குச் சென்றுவந்த அனுபவத்தைக் கூறுகிறார்:
""சென்ற ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் ரஷ்யாவில் வசிக்கும் டாக்டர் பாஸ்கரா என்ற நண்பரை சந்தித்தேன். அவரிடம் ""ரஷ்யாவிற்குத்தான் வர நேரம் வரவில்லை'' என்று கூறினேன். ""நீங்கள் வருகிறேன் என்றால் நான் ஏற்பாடுகளை செய்யத் தயார்'' என்றார். ஆகஸ்ட் மாதம் கிளம்பினேன். என்னுடன் 89 வயது நிரம்பிய பழனியப்பன், டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோரும் வந்தார்கள். இருவருமே பல புத்தகங்களை எழுதியவர்கள். எங்களது புத்தக வெளியீட்டு விழாவும் கண்காட்சியும் மாஸ்கோ தமிழ்ச் சங்க கட்டட வளாகத்தில் நடைபெற்றது. அங்கு எங்களுக்கு மிகவும் உதவியவர் பாலசுப்ரமணியம். இவர் இந்திய தூதரகத்தில் துணைத் தூதரக அதிகாரியாக இருக்கிறார். பின்னர் நாங்கள் எல்லோரும் செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்குச் சென்றோம். அங்கும் புத்தக கண்காட்சி நடந்தது. இந்த பயணத்தின் போது, நாங்கள் எடுத்துச் சென்ற புத்தகங்கள் அனைத்தும் விற்றுவிட்டன. பாதிக்குமேல் மாஸ்கோ தமிழ்ச் சங்கத்தில் தொடங்க இருக்கும் நூல் நிலையத்திற்கு புத்தகங்கள் வாங்கினார்கள். நமது சைதாப்பேட்டையில் படித்த சக்ரபாணி என்ற நண்பர் ரூ.25,000 தந்து, தான் படித்த பள்ளிக்கு புத்தங்கள் தருமாறு கேட்டுக் கொண்டார்.
எனது தந்தையார் தமிழ்வாணன் 1955 -ஆம் ஆண்டு ஆரம்பித்ததுதான் மணிமேகலை பிரசுரம். அவர் போட்டுகொடுத்த பாதையில் நாங்களும் பயணம் செய்கிறோம். வருடத்திற்கு சுமார் 600 புத்தகங்கள் வெளியிடுகிறோம். பதிப்புலகில் இது அதிசயம். தினசரி இரு புத்தகங்கள் என்ற விதத்தில் அதை ஆண்டுக்கு 1000 புத்தகங்களாக அதிகரிக்க விரும்புகிறோம். அதற்காகவே ஒரு திட்டத்தையும் வைத்திருக்கிறோம். இதன்மூலம் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்க இருக்கிறோம்.
இப்படி போடும் புத்தகத்தை நம் நாட்டில் மட்டும் விற்காமல் வெளிநாடுகளுக்கும் விற்கிறோம். அதற்கு அங்கு சென்றால் தானே முடியும்? இன்று தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள். தமிழ் நாட்டில் நடப்பதைத் தெரிந்துகொள்ள, தமிழ்ப் புத்தகங்களை படிக்க விரும்புகிறார்கள். அவர்கள் இடத்திலேயே சென்று புத்தகங்களை விற்றால் வாங்குவார்கள் இல்லையா? அதைத்தான் நான் செய்கிறேன். முப்பது ஆண்டுகளில் நான் 100 நாடுகளுக்கு இப்படி பயணம் செய்து சிறிய மற்றும் பெரிய நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன்.
எங்கள் புத்தகங்களில் அதிக பதிப்புகள் வெளிவந்தவை "பிரபலமானவர்களின் விலாசங்கள்' (31 -ஆவது பதிப்பு வெளிவர இருக்கிறது). அடுத்து அதிகம் விற்ற புத்தகம் எனது சகோதரர் லேனா தமிழ்வாணன் எழுதிய "1000 ஒரு பக்க கட்டுரைகள்', "நேரம் நல்ல நேரம்' சரவணா பவன் அண்ணாச்சி இந்த நூலை படித்து விட்டு, எங்களிடம் இருந்து 10,000 பிரதிகள் வாங்கி தன் ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொடுத்தார்'' என்றார் ரவி தமிழ்வாணன்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.