முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தங்கம் குவித்த தற்காப்புக்கலை

கொரியா நாட்டு தற்காப்புக்கலை (டேக்வாண்டோ)  போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

Updated On : 12 மே, 2019 at 1:06 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:23 PM

கொரியா நாட்டு தற்காப்புக்கலை (டேக்வாண்டோ)  போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நம்முடைய தமிழக மாணவர்கள் 9 தங்கப்பதக்கம் வென்று நமது இந்தியாவிற்குப் பெருமை தேடி தந்துள்ளனர்.

இது பற்றி பயிற்சியாளர் சுரேஷ்குமரனிடம் கேட்ட போது சொன்னார்.

""கொரியா நாட்டில் அறிமுகமான தற்காப்பு கலை டேக்வாண்டோ. தென்கொரிய நாட்டின் தேசிய விளையாட்டு ஆகும். கொரியா மொழியில் "டே' என்றால் உதை, "க்வான்' என்றால்  கைகளால் தாக்கு, "டோ' என்றால் கலை என்று பொருளாகும். கை மற்றும் கால்களால் தாக்கி எதிரியை செயலிழக்கச்செய்யும் கலை இதுவாகும். டேக்வாண்டோ கலையில் கால்கள் அதிகம் பயன்படுத்தப்படும்.

Advertisement

டேக்வாண்டோ.  கலையை அறிமுகப்படுத்தியவர் சோய் ஹாங் ஹி என்ற ராணுவ அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப்போரின் போது இவர் ஜப்பானியரின் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டார். கொரியாவில் அக்காலப்பகுதியில் பிரபலமாக விளங்கிய டைக்கியான் (ற்ஹங்ந்ஹ்ர்ய்) என்ற தற்காப்புக்கலையின் அடிப்படையில் புதிய முறைகளையும் புகுத்தி நவீன டேக்குவாண்டோவை 1955-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

1988-இல் சியோலிலும் பின்னர் 1992-இல் பார்சிலோனாவிலும் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இது காட்சி விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2000-ஆம் ஆண்டில் சிட்னியில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் முழுமையான போட்டியாக அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமானது.

டேக்வாண்டோ கலையில் கால்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இக்கலையில் குறிப்பிட்ட வல்லுநர் எதிரி தன்னை நெருங்கும் போது கால்களைப் பயன்படுத்தி எதிரியைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துத் தாக்கிச் செயலிழக்கச் செய்வார். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் இந்தக் கலையை விரும்பி பயின்று வருகிறார்கள். இந்த பயிற்சியை நானும் எனது மனைவி மஞ்சுளாவும் சேர்ந்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறோம். எங்களுடைய முழு நேரப்பணி இது தான். 

டேக்வாண்டோ தற்காப்புக்கலைக்கான சர்வதேச போட்டிகள் மார்ச் மாதம் மூன்று நாள் மலேசியாவில் நடைபெற்றது. இதனை மலேசிய அரசாங்கமும், அங்குள்ள விளையாட்டு அமைச்சகமும் இணைந்து நடத்தியது. மொத்தம் 15 நாடுகளிலிருந்து இரண்டாயிரத்து இருநூறு போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பாக 65 பேர் கலந்து கொண்டோம். இதில் 55 பேர் எங்களுடைய மாணவர்கள். இதில் இந்தியாவிற்கு 9 தங்கப்பதக்கம் கிடைத்தது. இதில் தீக் ஷிதா 2 தங்கத்தையும், தனுஷ் நாராயணன் 2 தங்கத்தையும், அர்ஜீன், பொற்செழியன் தலா 1 தங்கத்தையும் ஆகாஷ், பிராஜன் தலா 1 வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.  6 தங்க பதக்கத்தை வென்றவர்கள் எங்களுடைய மாணவர்கள்'' என்று பெருமையாகச் சொல்கிறார் சுரேஷ்குமரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.