முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

12 மணி நேரத்தில் 35 கோடி மரக்கன்று

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. 

Updated On : 13 அக்டோபர், 2019 at 5:44 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:52 PM

"வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. 

கிழக்கு ஆப்பிரிக்காவில், அதிகமான மக்கள் வசிக்கும் நாடு எத்தியோப்பியா. சுற்றுச்சுழல் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் இங்கு 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு மிகவும் குறைந்தது. விளைவு அந்த நாட்டில் கடும் வறட்சி நிலவ ஆரம்பித்தது. இத்தனைக்கும் இங்கே 80 சதவிகித மக்களுக்கு விவசாயம் தான் பிரதான வேலை. இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது எத்தியோப்பியாவின் நில அமைப்பு.

போதுமான மழை இல்லாததால் மண் அரிப்பு, மண் வளம் குன்றிப்போதல், காடுகள் அழிவு மற்றும் வறட்சி ஆகியவை வழக்கமாகிவிட்டன. வறட்சியை போக்குவதற்கான வழி என்ன என்று யோசிக்க ஆரம்பித்தது எத்தியோப்பிய அரசு. 

Advertisement

மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே வறட்சியை தீர்க்க முடியும் என்று நம்பினார்கள். தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே. மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே!  என அந்த நாடு பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. மேலும் 400 கோடி மரக்கன்றுகளை நடுவதற்காக முயற்சியில் இறங்கினார் பிரதமர் அபிய் அகமது. அதன்படி, "பசுமை மரபு' என்ற பெயரில் நாடு முழுவதும் மரக்கன்று நடும் திட்டம் ஒன்றை அந்த நாடு அறிமுகப்படுத்தியது. நாட்டில் இருக்கும் அனைத்து மக்களும் இதில் பங்கேற்க வேண்டுமென பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மரம் நடும் நிகழ்ச்சி  தொடங்கப்பட்டதும் முதல் ஆறு மணி நேரத்திலேயே 15 கோடி மரங்கள் நடப்பட்டன. ட்விட்டர் மூலம் நாட்டு மக்களுக்கு இதனைத் தெரிவித்த அஹமத், நம்முடைய இலக்கு இன்னும் எட்டப்படவில்லை என மக்களை மேலும் உற்சாகப்படுத்த எண்ணிக்கை அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் இரட்டிப்பிற்கும் அதிகமானது. அதாவது 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர்.

இந்தியா கடந்த 2017-ஆம் ஆண்டு, 12 மணி நேரத்தில் 6 கோடியே 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டதே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது, அந்த சாதனையை எத்தியோப்பியா பெரும் வித்தியாசத்தில் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.