ஞாயிறு கொண்டாட்டம்

தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக்கலை!

தெருக்கூத்து, தோல்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து என கூத்துகளில் பலவகை  உண்டு. இசையுடன்  தெருக்களில் கலைஞர்கள் ஆடியும், பாடியும், நகைச்சுவையாகப் பேசியும் ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய  வைப்பது

சி.வ.சு. ஜெகஜோதி

தெருக்கூத்து, தோல்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து என கூத்துகளில் பலவகை உண்டு. இசையுடன் தெருக்களில் கலைஞர்கள் ஆடியும், பாடியும், நகைச்சுவையாகப் பேசியும் ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பது தெருக்கூத்து. பதப்படுத்தப்பட்ட ஆடு அல்லது மாட்டின் தோலில் வர்ணம் பூசி, பொம்மைகள் போன்ற தோற்றத்தை உருவாக்கி அவற்றை விளக்கு வெளிச்சத்தில் (நிழலாட்டம்) திரைமறைவில் இருந்து இயக்குவது தோல்பாவைக் கூத்து.
எடை குறைவான மரத்தால் பொம்மைகள் செய்து அதை திரைமறைவிலிருந்து இயக்கி புராணக்கதைகளையும், தலைவர்களின் வரலாறுகளையும் மக்கள் மனதில் பதியவைப்பது மரப்பாவைக் கூத்து எனப்படுகிறது.
திரைப்படமும், சின்னத்திரையும் வந்த பிறகு இக்கூத்துக் கலைகள் அழியும் நிலைக்கு வந்து விட்டன. இக்கலை அழிந்து விடாமல் காக்கும் வகையில், தொடர்ந்து 3 தலைமுறைகளாகக் கலைநிகழ்ச்சி நடத்தி வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வசித்து வரும் முருகன் சங்கீத பொம்மலாட்டக் குழுவின் உரிமையாளரான டி.எஸ்.முருகன்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு தொடர்ந்து 5 நாள்களுக்குப் பல்வேறு புராணக் கதைகளைப் பொம்மலாட்டம் மூலம் நடத்திக் காட்டிய அவரை சந்தித்த போது, அவர் கூறியது:
""என் தந்தை டி.எஸ்.சங்கரநாதன் பொம்மலாட்டக் கலையின் தந்தை என்று சொல்லும் அளவுக்கு 8 வயது முதல் 92 வயது வரை பொம்மலாட்டக் கலைஞராக இருந்தவர். அரசு விருதுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். அவரைப் பின்தொடர்ந்து 41 ஆண்டுகளாக நான் பொம்மலாட்டம் நடத்தி வருகிறேன்.
இக்கலை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான கலைகளில் ஒன்றாகும். எகிப்தில் பிரமிடுகளை அகழ்வாராய்ச்சி செய்தபோது மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகள் கிடைத்திருக்கின்றன. இதன் மூலம், அந்த நாட்டிலும் இக்கலை இருந்துள்ளதை அறிய முடிகிறது.

கதைக்கேற்றவாறு மரப்பாவைக் கூத்து நடத்த இசைக் கலைஞர்கள் உட்பட குறைந்தபட்சம் 10 பேர் தேவைப்படுவர். ஒரு பொம்மையை ஒருவரே திரைமறைவிலிருந்து இயக்க முடியும். எடை குறைவான கல்யாண முருங்கை மரத்திலிருந்து பொம்மைகள் செய்யப்படுகின்றன. தலையை
எந்தப் பக்கம் சாய்க்கிறோமோ அந்தப் பக்கம் பொம்மையின் தலையும் சாயும் வகையில் எங்களது தலையில் தலைப்பாகை அணிந்திருப்போம். அந்தத் தலைப்பாகையில் பொம்மையின் கயிறுகள் இணைக்கப்பட்டிருக்கும். எங்கள் கையில் ஸ்டிக் கம்பிகள் வைத்துக்கொண்டு நின்றபடிதான் பொம்மலாட்டத்தை நடத்த முடியும்.
எங்கள் குழுவில் பெண்கள் இல்லை. எனினும், எங்களில் சிலர் பெண் குரலிலும் பேசுவோம். சங்கீதத்துடன் பொம்மலாட்டத்தை நடத்துவதால் எந்த ஒரு புராணக் கதையும் பார்வையாளர்களின் மனதில் எளிதில் புரிந்து விடும். நகைச்சுவையாகவும் பொம்மலாட்டத்தை நடத்துவதால் அனைத்து தரப்பினரும் கடைசிவரை விரும்பிப் பார்ப்பர்.
விநாயகர் புராணம், வள்ளித் திருமணம், அருணகிரிநாதர், சபரிமலை ஐயப்பன், அரிச்சந்திரா, சீதா கல்யாணம், பூலோக கைலாயம் போன்ற புராணக் கதைகளையும், ராமாநுஜர், தியாகராஜர் சரித்திரங்களையும் பொம்மலாட்டங்களாக நடத்தி வருகிறோம்.
திருமண நிகழ்ச்சிகளில் கல்யாண கலாட்டா, கல்யாண வைபோகமே உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளையும், சமூகக் கதைகளையும், திரைப்படப் பாடல்களையும் இணைத்து திருமணத்துக்கு வந்தவர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் நடத்துகிறோம்.
பொம்மலாட்டத்தை குழந்தைகள்தான் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மனதில் பொம்மலாட்டக் கலை மூலமாக சிறந்த தன்னம்பிக்கைக் கருத்துகளை நகைச்சுவையாகப் பதிய வைத்து விடுவோம். இக்கலை நிகழ்ச்சியை நடத்த வருமாறு பல்வேறு பள்ளிகளில் இருந்தும் எங்களை அழைக்கத் தொடங்கியிருக்
கின்றனர்.
ஒரு கதைக்கு குறைந்தபட்சம் 10 முதல் 12 பொம்மைகள் வரை தேவைப்படுகிம். பொம்மலாட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு கதைக்கேற்றவாறு பொம்மைகளை அலங்கரிக்க ஒன்றரை மணிநேரமாகும். இது தவிர பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்த 2 மணிநேரம் ஆகிறது.
தமிழகம் முழுவதும் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். அதேபோல், சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். இதுவரை எந்த விருதும் கிடைத்ததில்லை. அரசு விழாக்களில் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும். மிகவும் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க இந்தக் கலை வளர்ந்தால் பல கலைஞர்கள் உருவாவது நிச்சயம்''என்றார் டி.எஸ்.முருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT