முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பார்த்திபன் ஆதரவு!

இந்திய சினிமாவில் பரபரப்பாகி இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு குறித்து இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கூறியிருப்பதாவது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:


இந்திய சினிமாவில் பரபரப்பாகி இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு குறித்து இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கூறியிருப்பதாவது... ""கலைக்கு மொழியில்லை என்று நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை நாம் எந்த அளவுக்குப் பின்பற்றுகிறோம் என்று தெரியவில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் சுட்டுரைப் பதிவைப் பார்க்கும் போது அவருக்கே இப்படி ஒரு நிலையா என்று மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் தென்னிந்திய மற்றும் பாலிவுட் அளவில் மட்டும் வெற்றிபெற்றவர் அல்ல. அவர் ஆஸ்கர் வின்னர்.பாலிவுட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைமேல் ஒரு பயம். இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல. 

இளையராஜா தமிழகத்தில் ஹிந்திப் பாடல்கள் மேலோங்கி நின்ற போது அதை உடைத்து, தமிழ்ப் பாடல்களைக் கோலோச்சச் செய்தவர். அந்த மாதிரி ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்குப் பின்னர் பாலிவுட் அடி வாங்கியது. அவரது வருகை பாலிவுட்டுக்கு பெரும் பாதிப்பு. அதனால் பழுத்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல எப்போதுமே இந்த எதிர்ப்பு இருந்திருக்கிறது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.இதுவரை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாமல் மறைமுகமாக இருந்திருக்கலாம்.

இப்போது யாரோ ஒருவர் மூலமாக அவருக்குத் தெரிந்திருக்கிறது. அதை நினைத்து நாம் பெருமைதான் பட வேண்டுமே தவிர வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் எனக்குத் தோன்றுகிறது. கமல்ஹாசனையும் பாலிவுட் வரவிடாமல் தடுத்தார்கள். இந்த எதிர்ப்பை நாம் எப்படிக் கடந்து போகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டியது. நம்மைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றாலே அது நமக்குப் பெருமைதான்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.