முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

படிக்காத  விஞ்ஞானி

கேரளத்தில் உணவுப் பொருள்களின் விளைச்சல் மிகக் குறைவு. அரிசி, காய்கறிகளுக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கும் "நுகர்' மாநிலமான கேரளத்தில் பணம் காய்க்கும் ரப்பர், மிளகு, ஏலக்காய்

Updated On : 9 பிப்ரவரி, 2020 at 6:58 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:17 PM

கேரளத்தில் உணவுப் பொருள்களின் விளைச்சல் மிகக் குறைவு. அரிசி, காய்கறிகளுக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கும் "நுகர்' மாநிலமான கேரளத்தில் பணம் காய்க்கும் ரப்பர், மிளகு, ஏலக்காய், தேயிலைத் தோட்டங்கள் அதிகம். கேரளம் இடுக்கி மாவட்டத்தின் அடர்ந்த மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,230 அடி உயரத்தில் உள்ள ஸியோன் மிளகுப் பண்ணை அகில இந்திய பிரசித்தம் பெற்றது.

அதற்கு காரணம் அங்கு விளையும் அரிய வகை மிளகுதான். "கருப்புத் தங்கம்' என்று சொல்லப்படும் மிளகு விளைச்சலுக்குப் பொருத்தமில்லாத காட்டு நிலத்தில் இந்த அரிய வகை மிளகுக் கொடிகளை வளர்ப்பதுடன் பாதுகாத்துவரும் ஜார்ஜ் "படிக்காத விஞ்ஞானி'யாகக் கேரளத்தில் மதிக்கப்படுகிறார். ஜார்ஜிற்கு அறுபத்தெட்டு வயதாகிறது.

"சொன்னால் நம்ப மாட்டீர்கள்... நான் எட்டாம் வகுப்பில் பாதியில் நின்றுவிட்டவன். படிப்பு வராததும் ஒரு காரணம்... தொடர்ந்து படிக்க வைக்கப் பெற்றவர்களிடம் வசதியில்லாதது இன்னொரு காரணம்.

Advertisement

ஒருமுறை வகுப்பில் ஆசிரியர் "நீ பிற்காலத்தில் என்ன வேலை செய்ய விரும்புகிறாய்' என்று கேட்டார். நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் விவசாயி ஆவேன் என்றேன். அப்போது எங்கள் குடும்பத்திற்குக் காணி நிலம் கூட இல்லை. சோறு போடும் விவசாயத் தொழில் புனிதமானது என்றார் ஆசிரியர். கடைசியில் நான் சொன்னபடியே விவசாயி ஆக முடிந்ததில் மகிழ்ச்சிதான்.

""எனது பூர்விகம் கோட்டயத்திற்குப் பக்கத்தில் உள்ளது. நாங்கள் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு நிலம் வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தோம். அதற்காகச் சிறை கூடச் சென்றிருக்கிறேன். ஆனால், நிலம் ஏதும் கிடைக்கவில்லை. வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாகிவிட்டது. கடைசியில் இடுக்கியில் குடியேறினேன். அப்போதுதான் திருமணம் நடந்தது. மனைவியும் நானும் சேர்ந்து ஒன்றரை ஏக்கர் நிலத்தைச் சக பழங்குடி நண்பரிடமிருந்து வாங்கினோம். அதில் விவசாயம் செய்ய நிலத்தைப் பண்படுத்தினோம்.

பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய போது மிளகுக் கொடியை வளர்ப்பதில் அனுபவம் வளர்த்துக் கொண்டேன். அந்த அனுபவம் இப்போது கை கொடுத்தது. ரப்பர், மிளகு, காப்பி, பாக்கு, ஜாதிக்காய் , பலா போன்றவைகளைப் பயிரிட்டேன். பராமரிப்புச் செலவுகள் அதிகமாயின. காலநிலை மாற்றத்தால் விளைச்சல் மிகவும் குறைவானதினால் இயற்கை விவசாயத்திற்கு நான் திரும்பினேன். அதுதான் என்னை என் குடும்பத்தை உயர்த்தியிருக்கிறது. நானும் எனது நான்கு பிள்ளைகளும், அவர்களின் குடும்பமும் இன்று மலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மிளகில் இருபது வகை மிளகுக் கொடிகளை வளர்த்து வருகிறோம். பெருமழைக் காலங்களில் மிளகுக்குக் கொடிகள் மட்டுமல்ல அனைத்துப் பயிர்களும் மரங்களும் சேதமடையும். அழிந்தும் போகும். காட்டுப் பகுதி என்பதால் சூரிய வெளிச்சம் சரிவரக் கிடைக்காது. நிழலில் வளருவதுடன் அதே சமயம் வேர்களில் நோய் வந்தாலும் எதிர்த்து வளர்ந்து பலன் தரும் அரிய வகை மிளகுக்குக் கொடியை இனம் கண்டு அவற்றைப் பெருக்க வழிவகைத் தேடினேன்.

சில இனங்கள் நல்ல விளைச்சல் தரும்.. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியிருக்காது. சில இனம் நோய்களை எதிர்த்து வளரும். ஆனால் விளைச்சல் குறைவாகயிருக்கும். தோட்ட முண்டி, நீலி முண்டி ரகங்கள் காலநிலை மாற்றம், பெருமழைப் பாதிப்பையும் தாண்டி வளர்ந்தது. இந்த வகைகளை மகரந்த சேர்க்கை மூலம் சேர்த்து "ஸியோன் முண்டி' என்ற புதிய ரகத்தை உருவாக்கினேன். இந்த முயற்சிக்கு எடுத்தவுடன் வெற்றி கிடைக்கவில்லை. பலமுறை முயன்று புதிய ரகங்களை உருவாக்க முடிந்தது. அதனால் தரமான உருவத்தில் பெரிய மிளகுகள் விளைந்தன. இதனைக் கேள்விப்பட்டுப் பலரும் மிளகுக் கொடி வாங்க என்னிடம் வர ஆரம்பித்தனர். இப்படி எனது கண்டுபிடிப்பு கேரளம் முழுவதும் பரவியது. அன்றைக்கு இந்த மிளகுக்காகத்தான், ரோமானியர்களும் அராபியர்களும், போர்த்துக்கீசியர்களும், ஆங்கிலேயர்களும் இந்தியாவிற்கு வந்தனர்.

எனது பண்ணையில் இருநூறு வகை மருத்துவக் குணமுள்ள செடிகள் வளருகின்றன. எனது பண்ணையை ஐந்து ஏக்கருக்கு விரிவாக்கம் செய்தேன். இப்போது காய்கறிகள், பழவகைகள், அனைத்தும் எனது தோட்டத்தில் கிடைக்கும். பண்ணையில் கோழி, ஆடு, மாடு, பசு, முயல், வாத்து வளர்ப்பும் உண்டு. தண்ணீருக்காகக் குளங்கள் உண்டு. குளங்களில் மீன்கள் வளருகின்றன. எனது பண்ணை ஒரு தன்னிறைவுப் பண்ணை. என்ன சாப்பிடுவதற்கு அரிசி மட்டும்தான் வெளியே இருந்து வாங்கணும். ஏனென்றால் இங்கு நெல் பயிரிட முடியாது'' என்கிறார் "மிளகு மனிதன்' என்று அழைக்கப்படும் ஜார்ஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.