குறும்பட உலகத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்திருக்கும் மற்றொரு படைப்பாளி வினோத் ராஜேந்திரன். இவர் இயக்கத்தில் வெளிவந்த "விழியும் மொழியும்' என்கிற மியூசிக் ஆல்பம் இணையத்தில் மிகப் பிரபலம். இப்போது புதுமுகங்கள் தினேஷ் சதாசிவம், ஸ்மிருதி வெங்கட், அபிலாஷ், மாரிஷ், ரஞ்சித், ஹரி, குரு நடிப்பில் இவர் இயக்கி முடித்துள்ள படம் "பற்ற வைத்த நெருப்பொன்று'.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது விறுவிறுப்பான செய்தி ஒன்று ஊடகங்களில் தந்தியடித்தன. அரசியல், அதிகாரம் என பெரும் பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லோருக்கும் அதில் சம பங்கு. கல்வி தெய்வமாக வணங்க வேண்டியவர்களை, காவல் துறை விசாரணையில் பார்த்த போது வெவ்வேறு உணர்வுகள். அதை மையமாக கொண்ட கதை. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் "பாலிடிக்ஸ்' என்றாகி விட்டது இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அப்படித்தான் இந்த கதையின் ஓட்டம் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் வரும். இப்படியும் போகலாம், அப்படியும் போகலாம்.
இந்தக் கதையும் அப்படித்தான். வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான். நானும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் கொஞ்சம் சுமை. விரைவில் படம் திரைக்கு வருகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.