செவ்வாய் கிரகத்தில் முதல் இயக்கம்
செவ்வாய்க் கிரகத்தில் என்ன இருக்கிறது, அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, இதற்கு முன்னர் அங்கே உயிர்கள் இருந்ததா, இனி உருவாக வாய்ப்பிருக்கிறதா என நாசா பல கோணங்களில் ஆராய்ச்சிகள்
செவ்வாய்க் கிரகத்தில் என்ன இருக்கிறது, அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, இதற்கு முன்னர் அங்கே உயிர்கள் இருந்ததா, இனி உருவாக வாய்ப்பிருக்கிறதா என நாசா பல கோணங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக செவ்வாய் கிரகத்திற்கு ரோவரை (ஆராய்ச்சிக்கு உதவ கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்) கடந்த ஆண்டு அனுப்பியது.
தற்போது நாசாவின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவர் செவ்வாய் கிரகத்தில் முதல்முறையாக கால் பதித்து சுழன்று சுழன்று நகர ஆரம்பித்துள்ளது. சிவப்பு கிரகமான செவ்வாயின் மேற்பரப்பில் ரோவர் எடுத்த படத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
நாசாவின் பெர்செவரன்ஸ் (Perseverance) ரோவர் பூமியில் இருந்து ஏழு மாதங்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக சென்றது. 3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ரோவர், 222.45 மில்லியன் கி.மீ. பயணம் செய்து செவ்வாய் கிரகத்தில் தனது முதல் இயக்கத்தை நிகழ்த்தி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் ரோவர் கால் பதித்த புகைப்படங்களையும் விடியோக்களையும் தற்போது நாசா வெளியிட்டுள்ளது.
Advertisement
ஆறு சக்கரத்துடன் கார் அளவிலான இந்த ரோவர் கருவி வானியலியலை துல்லியமாக ஆய்வு செய்யக்கூடியது. இது செவ்வாயில் அற்புதமாக கால் பதிக்கும் விடியோ காட்சி காண்போரை அதிசயக்க வைத்துள்ளது. மொத்தம் 6.5 மீட்டர் (21.3 அடி) தூரத்தை அரை மணி நேரம் ஊர்ந்து சென்று பார்த்துள்ளது ரோவர்.
ரோவருடன் குட்டி டிரோன் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இந்த குட்டி டிரோனானது, செவ்வாயின் குறைந்த அடர்த்தியில் டிரோனால் பறக்க முடியுமா எனக் கண்டறியவும், பறந்து கொண்டே செவ்வாயைப் படமெடுக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி செவ்வாயில் உயிரினங்களைத் தேடுவது மட்டுமில்லாமல், அங்கிருந்து மண் மற்றும் கல் மாதிரிகளைப் பூமிக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது ரோவர் எடுத்த புகைப்படத்தில், சுற்றியுள்ள நிலப்பரப்பை பார்க்கும் போது கரடுமுரடாக காட்சி அளிக்கிறது. தூரத்தில் பாறைகள் உயரமாக உள்ளன. ரோவர் ஒரு நாளைக்கு சராசரியாக 200 மீட்டர் ஓட்டும் திறன் கொண்டது.
ஆனால் புதைபடிவ நுண்ணுயிர் வாழ்வின் தடயங்களைத் தேடுவதே இந்த ரோவரின் முக்கியமான பணியாக நாசா கருதுகிறது.
இதனிடையே செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளை துளையிட்டு சேகரித்து அதனை மீண்டும் பூமிக்கும் கொண்டு வரும் பணியினை இன்னும் நாசா விஞ்ஞானிகள் மேற்கொள்ளவில்லை. விரைவில் அந்தப் பணிகளை தொடங்குவார்கள் என தெரிவிக்கிறது.
செவ்வாயில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வரும் திட்டத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் திட்டமிட்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்கா அதன் முதல் படியை எட்டியுள்ளது. இந்த திட்டமானது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் 2031-ம் ஆண்டு செவ்வாயின் மண் மாதிரி, பூமியில் இருக்கும்.