மாலைநேரம். சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள சுதர்சன்-வித்யா தம்பதிகளின் இல்லம் தேடிச்சென்ற போது ஊற வைத்த அரிசியுடன் மொட்டை மாடியில் கிளிகளின் வரவிற்காக காத்திருந்தனர். மாலை 4.30 மணி ஆனதும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து நீண்ட மரப்பலகையில் அரிசியுடன், வேர்க்கடலையும் உணவாக வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் கிளிகள் கூட்டம் மொத்தமாக வந்து அரிசி, கடலையை சாப்பிடுகின்றன.
சிந்தாதிரிப்பேட்டையில் சுதர்சனை பறவை மனிதர் என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
எப்படி பறவைகளுக்கு உணவளிக்கும் பழக்கம் வந்தது? சுதர்சனிடம் கேட்ட போது சொன்னார்:
""என்னுடைய அப்பா இறந்ததிலிருந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பறவைகளுக்கு உணவளித்து வருகிறேன். என்னுடைய தாத்தா சென்னையில் எலக்ட்ரிக்கல் தொழில் செய்து வந்தார். அப்போது கடையில் சேரும் சில்லறைகளை கொடுத்து மயிலாப்பூர், திருவல்லிக்கேணி கோயில்களுக்கு செல்லும் போது அங்கு இருப்பவர்களுக்கு யாசகமாக கொடுக்கச் சொல்வார். அப்போதிலிருந்து தான் எனக்கு அதிகம் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
என்னுடைய அப்பாவின் இறப்பிற்கு பிறகு ஒரு வெறுமை உண்டானது. அப்போதிலிருந்து வாய் பேச இயலாத ஜீவன்களுக்கு (கிளி, காகம், புறா, கழுகு) முடிந்தவரை காலை, மாலை என இரண்டு வேளையும் உணவளித்து வருகிறேன்.
தற்போது 4 ஆயிரம் கிளிகள் வரை வருகின்றன. குளிர்காலத்தில் இவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அப்போது தானியங்களின் தேவையும் அதிகமாகும். இவற்றை நான் வளர்ப்பதில்லை. உணவு மட்டுமே அளிக்கிறேன்.
வெயில் காலம் என்பதால் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பாத்திரங்களில் தண்ணீர் வைப்பேன். உணவை சாப்பிட்டு பிறகு அவை மரங்களில் தங்கிவிடுகின்றன. சமீபமாக சிந்தாதிரிப்பேட்டை பகுதியிலுள்ள ஏராளமான மரங்களை மாநகராட்சியினர் வெட்டிவிட்டார்கள். அதனால் பறவைகள் இனம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிக மரங்கள் நட்டால் பல வாயில்லா ஜீவன்களுக்கு இருப்பிடமாக அமையும். இனி வரும் காலங்களில் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இன்று ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் பலர் உயிர் இழக்கிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளை பார்க்கும் போது மரங்களின் அவசியத்தை கண்கூடாக உணர முடிகிறது. எனவே மரங்கள் வெட்டப்படுவதை தவிர்த்து மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒவ்வொரு தனிமனிதனும் முயற்சி செய்ய வேண்டும். மரங்களால் பறவை இனத்திற்கு மட்டும் பயனில்லை. மனிதர்களுக்கும் ஏராளமான நன்மைகள் உள்ளன.
குழந்தைகளான பறவைகள்: என்னுடைய ஒரே மகளின் திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கு பிறகு என்னுடைய குழந்தைகளே இவர்கள் தான் (கிளி கூட்டத்தை காண்பிக்கிறார்).. காலையில் 6 மணிக்கு எல்லாம் உணவு வைத்துவிட வேண்டும். எனக்கோ ஐம்பது வயதாகிறது எழுந்திருக்கும் போது சில நேரம் தாமதமாகிவிட்டால் மாடியிலிருந்து சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்கும் இந்த கிளிகள். ஏன் இன்னும் சாப்பாடு வைக்கவில்லை என்பது போன்று அதனுடைய சத்தம் இருக்கும். எவ்வளவு சோம்பலாக இருந்தாலும் உணவு வைக்க தவறுவதில்லை.
இந்த கரோனா பொது முடக்கக் காலம் என்பது பெரும் சவாலாக இருந்தது. ஒரு கட்டத்தில் பறவைகளுக்கு தேவையான தானியங்கள் கிடைப்பது தட்டுப்பாடாக இருந்தது. நான் அருகிலுள்ள பகுதிக்கு சென்று வாங்கி வரும் போது காவல்துறையினர் பிடித்து இருக்கிறார்கள். பறவைகளுக்கு வாங்கிச் செல்கிறேன் என்று சொன்னாலும் அபராதம் வாங்காமல் விட மாட்டார்கள். இது போன்ற கஷ்டங்களை நான் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை'' என்கிறார் சுதர்சன்.
""பத்தாண்டுகளாக செய்து வரும் இந்த உணவு சேவையால் எங்கள் குடும்பத்திற்கு அதிகம் மன நிம்மதி கிடைத்துள்ளது. யாரும் எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை. வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது ஒரு விதத்தில் புண்ணியம் என்பதை நாங்கள் கண்கூடாக உணர்ந்துள்ளோம். கரோனாவால் உலகமே பயந்துள்ளது.
ஆனால் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எங்களால் முடிந்த இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம். இதில் சில கஷ்டங்களும் உள்ளன. நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு இடத்திற்கு செல்ல முடியாது. அப்படியே சென்றாலும் உணவளிக்கும் நேரத்திற்கு வந்துவிட வேண்டும்.
எங்கள் வீட்டை சுற்றியிருப்பவர்களும் இந்த உணவளிக்கும் சேவைக்கு உதவி வருகிறார்கள். இது தவிர எங்கள் வீட்டில் பூனை கூட்டமும் உள்ளது'' என்றார் வித்யா.
சென்னை போன்ற நகரின் பிரதான பகுதியில், இது போன்ற கிளிகளின் வரவு அழகான கிராமத்தை பார்த்த மனநிறைவை தந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.