கடைசி ஆசை...
மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற கணவர் தனது வீடு, கார், வங்கி சேமிப்பு அனைத்தையும் முதியோர் இல்லம் கட்ட அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற கணவர் தனது வீடு, கார், வங்கி சேமிப்பு அனைத்தையும் முதியோர் இல்லம் கட்ட அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
டாக்டர் ராஜேந்திர கன்வர். ஓய்வு பெற்ற ஆங்கில மருத்துவர். ஹிமாச்சல் பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஜோல்சப்பட் ஊரில் வசிக்கிறார். அவர் மனைவி கிருஷ்ணா கன்வர். கிருஷ்ணாவும் ஹிமாச்சல் அரசு கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இனி ராஜேந்திர கன்வர் தொடர்கிறார்.
Advertisement
"கணவன் மனைவியாக வாழ்ந்தோம். நல்ல நண்பர்களாகவும் இருந்தோம். எங்களுக்கு வாரிசு பிறக்கவில்லை என்ற குறையைத் தவிர வேறு எந்த குறையும் எங்களுக்கு இல்லை. ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசித்தோம். இருந்தாலும் என்ன செய்ய ... என்னை தனியா விட்டுவிட்டு போன வருஷம் கிருஷ்ணா சென்றுவிட்டார். கிருஷ்ணா வாழும் போது வெயிலில், மழையில், குளிரில் வாடும் ஆதரவு இல்லாத முதியோர்களைக் காணும் போது மனம் பதைபதைப்பாள்.
இவர்களுக்குகென்று ஒரு முதியோர் இல்லம் இருந்தால் வயதான காலத்தில் நிம்மதியாக வாழலாம் அல்லவா.. என்பார். நமக்கு குழந்தைகள் இல்லை. நமது உறவினர்கள் அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளார்கள். நமக்குப் பின் நமது வீடு, சேமிப்பு என்ன ஆகுமோ... அதனால்... நமக்குப் பிறகு நம் வீடு முதியோர் இல்லமாக ஆனால் எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆதரவற்ற முதியோர்கள் சிரமமப்படாமல் தங்கள் வாழ்க்கையை முடிக்க உதவும்.
எங்களில் யார் முதலில் போவோம் என்று அப்போது தெரியாது. கிருஷ்ணா முந்திக் கொண்டதும், அவர் கனவை நிறைவேற்ற முடிவு செய்தேன்.
சொந்தங்களுடன் பேசினேன். கிருஷ்ணாவின் விருப்பத்தை அவர்களிடம் சொன்னேன். எனக்குப் பிறகு சொத்து உறவினர்களுக்குப் போகும். அதனால் அவர்கள் மனம் கோணாமல் இருக்க அவர்களிடம் கலந்து ஆலோசித்தேன். சொந்தங்களும், கிருஷ்ணாவின் ஆசையை நிறைவேற்று என்றார்கள்.
எனக்கு சந்தோஷம். அவர்கள் கிருஷ்ணாவின் ஆசையை... உணர்வை மதித்தார்கள். அவர்கள் ஒப்புதலுடன், எனக்குப் பிறகு எனக்கு சொந்தமாக இருக்கும் அனைத்தும் ஹிமாச்சல் அரசிற்கு சேரும் என்றும் எனது வீட்டை முதியோர் இல்லமாக மாற்றவேண்டும்... அதே சமயம் ஆதரவற்ற முதியோர்களை உண்மையிலேயே நல்லபடியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று உயில் எழுதி பதிவு செய்து அரசிடம் ஒப்படைத்துவிட்டேன்...' என்கிறார்.
ராஜேந்திர கன்வர் ஓய்வு நேரங்களில் ஊர் மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார்.