பருவ காதல்
ராம் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்குரைஞர் ஹால்வின் தயாரித்து வரும் படம் பருவ காதல். காளிங்கராயன், சல்மிதா, ஆர். சுந்தர்ராஜன், போண்டா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ராம் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்குரைஞர் ஹால்வின் தயாரித்து வரும் படம் பருவ காதல். காளிங்கராயன், சல்மிதா, ஆர். சுந்தர்ராஜன், போண்டா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் கு. ரவி. படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் தனி மனிதனுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கி விட்டன.
எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது... எவர் பின்னே செல்வது... என்பதெல்லாம் இந்த தலைமுறைக்கு சாபம் போல் விதிக்கப்பட்டுள்ளன. இது நேர்மையான குற்ற உணர்ச்சி என யாரிடமும் சொல்வதற்கு இல்லை. சாதி பூதம் தமிழகம் முழுக்க காதலர்கள் மத்தியில் உண்டாக்கும் பேரச்சத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றக் கோரி கதறுகிறது காதல். இதுதான் இப்போதையை நிலை. இதை அப்படியே பதிவு செய்திருக்கிறேன்.
விவசாயம், கிராமம், தமிழர்களின் முகம், காதல், அனுபவங்கள்தான் படம். அன்பும் பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம் என்பதை காட்சிகளின் வழியாக நின்று பேசியிருக்கிறேன். காதல்தான் இங்கே எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஏமாற்றி பிழைக்காதவர்கள், சுய நலமாக சிந்திக்காதவர்கள், பொய் முகம் காட்டி புன்னகைக்காதவர்கள், இந்த உலகம் கொடுத்த காதலை அதன் வழியாக நின்று தரிசிக்கிற காதல் ஜோடி. அவர்களின் பயணத்தில் வருகிற காதல் அவர்களை உன்னதமாக்குகிறது.
மனிதமாண்புகள், விழுமியங்கள் மாறிவிட்டன. இந்த காரணத்துக்குப் பின்னால் சாதி, மத, பண்பாடு சார்ந்த அழுத்தமான அரசியலும் இருக்கிறது. நாங்கள் புது யுகத்துக்குள் நுழைந்துவிடோம்... நவ நாகரிகம் அடைந்துவிட்டோம். அந்தக் கணத்தின் அனைத்துப் பரிமாணங்களிலும் வாழ்கிறோம்... கொண்டாடுகிறோம் என்று கொண்டாட்டத்தை வெளித்தோற்றத்தில் முன்வைத்தாலும். அவர்கள் உள்ளுக்குள் உறவுச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதன் தெளிவான எடுத்துக்காட்டுத்தான் இந்தப் படம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் என்னை மனிதனாக உணர்ந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். அதனால் எந்த சமரசமும் இதில் இல்லை''என்றார் இயக்குநர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.