மீண்டும் வருகிறார் பபிதா
அடுத்த இன்னிங்ஸ் ஆட வருகிறார் நடிகை பபிதா. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு ஈடான பெயர், புகழை பெற்றவர் பபிதா.
அடுத்த இன்னிங்ஸ் ஆட வருகிறார் நடிகை பபிதா. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு ஈடான பெயர், புகழை பெற்றவர் பபிதா. இது தீபாவளி சீசன். இந்த நேரத்தில் அவர் நடனமாடி புகழ்பெற்ற ஒரு பாடலை சொன்னால் பொருத்தமாக இருக்கும். அது.. "நாயகன்' படத்தில் வரும் "நான் சிரித்தால் தீபாளி...' பாடல். அந்தப் பாடலில் அவரது நடனம் அனைவரையும் வசீகரிக்கவைத்தது. கே.பாக்யராஜின் "சின்னவீடு' படத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியமானது.
விஜய்யின் "ரசிகன்' படத்தில் "பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி..' பாடலில் பபிதாவின் நடனம் பிரபலம். விஜயகாந்துடன் "கூலிக்காரன்' உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம், ஹிந்தி என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் பபிதா. இவர், பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகவும் பின்னாளில் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான விசுவாசியாகவும் இருந்த நடிகர் ஜஸ்டினின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த பபிதா, சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் லக்ஷா கதாநாயகியாக நடித்த "காதலை மறந்தேன்' படத்தை தயாரித்திருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க களமிறங்கி இருக்கிறார்.
""இன்றைய சினிமா நிறைய புதுமைகளையும், மாற்றங்களையும் கொண்டதாக இருக்கிறது. இந்த வயதில் உள்ளவர்கள்தான் இந்த கேரக்டர் செய்ய வேண்டும் என்ற நிலமையெல்லாம் மாறிவிட்டது. என் இரத்தத்தில் நடனம் என்பது ஊறியுள்ளது. அதனால் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடச்சொன்னால் நடனமாடுவேன். வில்லியாக நடிக்கச்சொன்னாலும் நடிப்பேன். நடிக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தப்பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. இருந்தாலும் ஒரு காட்சியில் வந்தாலும் எனது கேரக்டர் பேசும்படியாக இருந்தால் நான் நடிக்க தயார்'' என்றார் பபிதா.
Advertisement