பொங்கல் வந்தனளே...!
மங்கை வந்தனளே! பொங்கலெனும்மங்கை வந்தனளே!
மங்கை வந்தனளே! பொங்கலெனும்
மங்கை வந்தனளே!
மங்கை எழில்படு நங்கை கருவிழி
மங்கா நிகர்ஒளித் திங்கள் உலகினில்
மங்கி வருந்திடும் தங்கம் உழவரின்
மனது குளிர்ந்திட மகிழ்வு மலர்ந்திட
(மங்கை)
தொல்லை தொலைந்திட இல்லை ஒழிந்திட
அல்லல் மடிந்திட நெல்லும் குவிந்திட
பல்லோர் உளத்திலும் புல்லி வருசெயல்
சொல்லி உரைத்திட எல்லையி லாதஓர்
நல்லன ஓங்கிட வில்லை அனநுதல்
முல்லைப் பொருநகை மெல்லிய பூங்கொடி
செல்வி தமிழரின் அல்லி பொங்கலெனும்
(மங்கை)
நன்று பயந்திட குன்றும் வறுமைகள்
நலிந்து செழுமைகள் தங்கவே
மன்றல் கமழ்ந்திடும் தென்றல் உழைப்பவர்
மனமும் மகிழ்வுடன் இலங்கவே
நன்றி இலாச்செயல் அன்றே மடிந்து
நடுங்கிப் புவிதனில் மங்கவே!
(மங்கை)
வஞ்சியவள் நம்மைக் கொஞ்சி மகிழ்ந்திட
வாகைமாலை சூடி வந்தனளே
நெஞ்சில் புதுமைகள் கொஞ்சி விளைந்திட
நேரிய நன்னடை பயின்றனளே
மிஞ்சி யெனுமணி கொஞ்சிக் குலவிட
மேனி குலுங்கிட வந்தனளே
அஞ்சா உளத்துடன் கொஞ்சும் தவத்துடன்
அகிலம் தழைத்திட வந்தனளே!
(மங்கை)
(14.1.1962-இல் தினமணி பொங்கல் மலரில் வெளியான அவரது முதல் கவிதை)