சினிமா பயணத்தில் 40 வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறார் நடிகர் ரஹ்மான். 1983இல் "கூடெவிடே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரஹ்மான் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். திரையுலக வாழ்க்கையில் 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தற்போது தமிழ், மலையாளத்தையும் தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ளார் ரஹ்மான். ஹிந்தியில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள கண்பத் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் டைகர் ஷெராப், கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர், விகாஸ் பால் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
""1983இல் பள்ளித் தேர்வை முடித்துவிட்டு ஊருக்கு கிளம்புவதற்காக காத்துக் கொண்டிருந்த நேரம் என்னை அழைத்துச் செல்ல வந்த பெற்றோருடன் கூடவே மலையாள இயக்குநர் ஒருவரும் வந்தார். சினிமாவில் நடிக்கிறாயா என கேட்டார். அதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான், நான் சினிமாவில் நடிப்பது போல ஒரு கனவு கண்டிருந்தேன். அந்த கனவு நனவான தருணம் போல கூடெவிடே படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்ததில்லை. எலக்ட்ரானிக் என்ஜினியர் ஆகவேண்டும் என்றுதான் விரும்பினேன்.
ஆனால் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பு என்னை தேடி வந்தது. அதன்பிறகு நடிப்புதான் உலகம் என மாறியது. எப்போதும் எனக்கு கே.பாலசந்தர், பாரதிராஜா பாணியில்தான் எண்ணங்கள் தோன்றும் என்பதால் அதேபோல உணர்வு பூர்வமான ஒரு கதையை உருவாக்கினேன், படத்திற்கு கடவுளின் தோட்டம் என்று பெயர் வரும் விதமாக "ஈடன் கார்டன்' என டைட்டில் வைத்திருந்தேன். அதன் வேலைகள் விரைவில் தொடங்கும். சிவாஜி, நாகேஷ், நசீர், மது போன்ற ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் ஏற்கனவே அமைந்தது, அந்த வரிசையில் இப்போது அமிதாப் பச்சனுடனும் நடித்து விட்டேன்.துப்பறிவாளன் 2, ஜனகனமன உள்ளிட்ட படங்களில் நடிக்கிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.