பொங்கல் வெளியீடாக தருணம்
ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்து வரும் படம் "தருணம்'. "தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்து வரும் படம் "தருணம்'. "தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். கிஷன் தாஸ், ஸ்ம்ருதி, பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ' உலகம் எங்கும் நிறைந்து கிடப்பதும், தேடிக் கொண்டிருப்பதும் அன்புதானே. பொருளையும், பணத்தையும் முதன்மை படுத்தாமல் அன்புதான் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை சொல்லிக் கொடுத்தாலே போதும், ஆரோக்கியமான தலைமுறை உருவாகிவிடும்.
இதற்கு தேவையில்லாத தியாகங்கள் அவசியமில்லை. இந்தக் கதையின் அடிநாதமாக அதன் கதாபாத்திரங்களுக்கு மன மாற்றம் நிகழ்ந்து விடும். இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை இது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அது போன்ற நம்பிக்கைதான் இந்தப் படம். தருணம் என்பது அதுவாகவே நிகழ்வது.
அப்படி நடக்கும் சின்ன சின்ன தருணங்களின் தொகுப்புதான் இந்தப் படம். அன்பையும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும் பேசும் அழகான கவிதை இது. ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது 2025 பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியிட இருக்கிறோம்'' என்றார் இயக்குநர்.