உயரமும், குட்டையும்..!
'உலகின் மிக உயரமான மனிதர்' என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர் சுல்தான் கோசென்.
'உலகின் மிக உயரமான மனிதர்' என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர் சுல்தான் கோசென். துருக்கியைச் சேர்ந்த இவரது உயரம் 8 அடி 3 அங்குலம். 2009-ஆம் ஆண்டில் இந்தச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.
இவர் டிச. 10-இல் தனது 41 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரை கௌரவிக்கும் விதமான காணொளியை கின்னஸ் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அத்துடன் சுல்தான் உலகிலேயே மிகவும் குட்டையான மனிதரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படங்களும் காணொளியில் இடம் பெற்றுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த சந்திரா பகதூர் டாங்கி என்பவர்தான் உலகின் மிக மிகக் குட்டையான மனிதர். தங்கியின் உயரம் சுமார் ஒன்றே முக்கால் அடி மட்டுமே!
சுல்தான் கோசென் பகுதி நேர விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். 'உலகின் மிக நீளமான கைகளை கொண்ட மனிதர்' என்ற பட்டமும் சுல்தானிடம் வந்து சேர்ந்தது.
பிட்யூட்டரி சுரப்பியில் வந்த கோளாறு காரணமாக சுல்தானின் உருவம் வளர்ந்துவிட்டது. காணொளி வைரலாகி வரும் நிலையில், சந்திரா பகதூர் டாங்கி இப்போது உயிருடன் இல்லை என்பது சோகமான செய்தி. 2015-ஆம் ஆண்டில் அவர் தனது எழுபத்து ஐந்தாவது வயதில் உயிரிழந்தார்.
-சுதந்திரன்