சிறுமியின் காலத்துக்கேற்ற கொடை
காலத்துக்கேற்ற உதவிகளை கடமை தவறாமல் மேற்கொண்டு வருகிறார் திருச்சியைச் சேர்ந்த சிலம்பச் சிறுமி மோ.பி. சுகித்தா.
திருச்சி ரஞ்சிதபுரம் பழைய பாண்டியன் தெருவைச் சேர்ந்த இவர், மேலப்புதூரில் உள்ள செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். அவரிடம் பேசியபோது:
""தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு ஏழை மாணவ, மாணவிகள், சாலையோர, ஆதரவற்ற மக்களுக்கு உதவிகளைச் செய்கிறேன். எனது சேமிப்பிலிருந்து புத்தாடைகள், இனிப்புகளை வழங்கி பண்டிகைகளைக் கொண்டாடுவேன். சாலையோரம் கடுங்குளிரில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகளையும், நூலகங்கள், திருச்சி மத்திய சிறையில் கைதிகளுக்கு நூல்களையும் நன்கொடையாக வழங்கி வருகிறேன்.கல்வியின் முக்கியத்துவம், கிராமப்புற விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.
விழாக் காலங்கள், பருவக் காலங்களிலும் வெயில், மழை பாராது உதவிகளை வழங்கி வருகிறேன். எனது பெற்றோர் அளிக்கும் பாக்கெட் மணியின் சேமிப்பிலும், எனக்கு கிடைக்கும் பரிசு தொகைகளை இதற்காக செலவிடுகிறேன். எனது சகோதர் சுஜித்தும் உதவுகிறார்.
வயதானோர் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு மிகப் பெரிய அளவிலான குடை, பனை ஓலை விசிறிகளை வழங்கியுள்ளேன்.
ஸ்ரீரங்கம், மாம்பழச்சாலை, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கோவில், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், தெருவாசிகளுக்கு காலணிகளையும் வழங்குகிறேன். "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்ற நோக்கில் என்னால் முடிந்த அளவு சேவைகளை புரிந்து வருகிறேன். பள்ளி மாணவர்களில் ஒருவர் இதேபோல முன்வந்தால் கூட மகிழ்ச்சிதான்.
எனது சேவைகளைப் பாராட்டி, தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி, பெண் குழந்தை முன்னேற்றத்துக்கான பெருமைக்குரிய மாநில விருதும், ஒருலட்சத்துக்கான காசோலை, பாராட்டுப் பத்திரங்களையும் பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு வழங்கியது'' என்றார்.