கண்ணாடி ஓவியம் 
ஞாயிறு கொண்டாட்டம்

காலத்தால் அழியாத கண்ணாடி ஓவியம்

மராட்டிய மன்னர்களில் கலைவளர்ப்பில் முன்னோடியாகக் கருதப்படுபவர் இரண்டாம் சரபோஜி.

வி.என். ராகவன்

மராட்டிய மன்னர்களில் கலைவளர்ப்பில் முன்னோடியாகக் கருதப்படுபவர் இரண்டாம் சரபோஜி. கடந்த 19- ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த இவர், தஞ்சாவூரில் காலங்காலமாக இருந்து வந்த சோழர், நாயக்கர் கால கலைகளையும் விட்டுவிடாமல் தொடர்ந்து ஆதரவு அளித்தவர்.

காசி பயணத்தை முடித்து திரும்பிய அவர் "தஞ்சாவூர் கலைத்தட்டு', "தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு', "தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம்' போன்ற கலைகளையும் வளர்த்தெடுத்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேவாலயங்களில் கண்ணாடி ஓவியங்கள் இருந்தன. இதனுடைய தாக்கமும் மன்னர் இரண்டாம் சரபோஜி காலத்தில் "தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம்' உருவாவதற்கு வாய்ப்பாக இருந்திருக்கிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக முன்னாள் காப்பாளர் ப. பெருமாளிடம் பேசியபோது:

""ஆங்கிலேயர்களிடமிருந்துதான் இந்தக் கண்ணாடி ஓவியம் தமிழர்களிடம் வந்திருக்கும். ஆனால், கண்ணாடியில் வரைவது அவர்களுடைய தொழில்நுட்பமாக இருந்தாலும், அதில் தீட்டப்படும் ஓவியம் தமிழர்கள் பாணிதான். இந்தப் புதிய கலைக்கு "தஞ்சாவூர் கண்ணாடி ஓவியம்' என்ற பெயர் வந்தது.

இப்படி உருவான தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்துக்கு காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் போதிய ஆதரவு கிடைக்காததால், 20- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தக் கலையை மீட்டெடுக்க மத்திய அரசு பெரும் முயற்சி மேற்கொண்டு 1979-இல் 10 பேருக்கு பயிற்சியை அளித்து, இந்தக் கலையை வளர்த்தெடுத்தது.

இந்தக் கலை மூலம் கிடைக்கும் வருவாய் மிகக் குறைவாக இருந்ததால், கலைஞர்கள் வெவ்வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர். இதை முழுநேர கலையாக வளர்த்தெடுக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது'' என்கிறார் பெருமாள்.

பயிற்சி பெற்றவர்களில் ஒருவரும், தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் ஓவியராகப் பணியாற்றுபவர் ராராமுத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அ. குமரேசனிடம் பேசியபோது:

""இரண்டாம் சரபோஜி காலத்தில், தமிழ்நாட்டு ஓவியப் பாணியைக் கண்ணாடியில் வரையும் தொழில்நுட்பம் வந்தது. அக்காலத்தில் கண்ணாடி ஓவியம் புதிதாக இருந்தாலும், அதில் வரையப்படும் உடலமைப்பை மிகைப்படுத்துதல், நளினத் தன்மை, இரண்டு பரிமாணத் தோற்றம் போன்றவை தமிழர்களின் கலைகள்தான்.

முதலில் நீர் வர்ணம் மூலம் கண்ணாடியில் கோட்டோவியம் வரையப்படும். அதன்பின்னர், தைல வர்ணம் மூலம் ஆடை, முகம், கை, கால் உள்ளிட்ட பாகங்களுக்கு தீட்டப்படும். ஆடை உள்ளிட்டவற்றுக்கு வெளிர் நிறமும், அடர்த்தியான வண்ணமும் பயன்படுத்தப்படும்.

ஆபரணங்களுக்கு வெள்ளி, செம்பு, தங்க நிறங்களாலான காகிதத்தைத் தேவையான அளவுக்கு கத்தரித்து கசக்கி அதன் மீது ஓட்டிவிட்டால், அதைக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது, தங்கம், வெள்ளி, முத்துக்கள் போன்று மிளிரும்.

இந்தக் கண்ணாடி ஓவியத்தில், கண்ணாடியின் பின்புறம் வரைய வேண்டும். பின்புறத்தைச் சட்டகத்தில் (பிரேம்) பொருத்தி முன்புறம் பார்க்கும்போது, அது கண்ணாடி ஓவியமாகத் தெரியும். கண்ணாடியின் பின்புறம் வரைய வேண்டியுள்ளதால், தலைகீழாகத் தான் படம் தீட்ட வேண்டும்.

எனவே, மூக்குத்தி, வலது கையில் அருள் புரிதல், சூலாயுதம் போன்ற ஆயுதங்கள், சேலை மடிப்பு போன்றவற்றை நேரெதிராக வரைய வேண்டும். இந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை முன்புறம் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது சரியான வடிவத்தைக் காண முடியும். இதனால், இதை "ரிவர்ஸ் பெயிண்டிங்' என ஆங்கிலத்தில் கூறுவர்.

இந்தக் கண்ணாடி ஓவியத்தைச் சட்டகத்தில் பொருத்தும்போது, வரைந்த பகுதி பின்புறம் போய்விடும். முன்புறம் கண்ணாடி வழியாக பார்க்கும் விதமாக இந்த ஓவியம் இருப்பதால், காலத்தால் அழியாமல் நீடித்து இருக்கிறது.

தொடக்கத்தில் கண்ணன், கண்ணனுடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்கள் அதிகமாக இருந்தன. விநாயகர் ஓவியங்களும் சில வரையப்பட்டன. தற்போது சிவன் - பார்வதி, நடராஜர், முருகன், வெங்கடாசலபதி, ராமர் பட்டாபிஷேகம், சரஸ்வதி, லட்சுமி போன்ற தெய்வ உருவங்கள் வரையப்படுகின்றன. இதோடு, விலங்குகள், பறவை உருவங்கள் என்று வாங்குபவர்கள் விரும்பிக் கேட்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

அந்தக்காலத்தில் இயற்கையான பொருள்களில் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டன. தற்போது செயற்கை பொருள்களால் செய்யப்பட்ட வர்ணங்கள் நிறைய வந்துவிட்டன. கண்ணாடி ஓவியம் தீட்டுவதிலும் நவீன முறைகள் வந்துவிட்டன. ஏற்கெனவே காகிதத்தில் வரையப்பட்ட ஓவியத்தின் நகலை கண்ணாடியின் கீழே வைத்து மேல்புறம் தீட்டப்படுகிறது. எனவே, தூரிகையைப் பிடித்து வரைய தெரிந்தால், கண்ணாடி ஓவியத்தில் தேர்ச்சி பெறலாம். ஆனால், கண்ணாடி வழுக்கும் என்பதால், அதில் தூரிகையைப் பிடித்து வரைவது சற்று கடினம். அதற்கு பயிற்சி பெற்றால் வரைவது எளிதாக இருக்கும். அப்போதுதான் அந்த ஓவியத்தில் நளினத்தன்மை இருக்கும்.

அண்மைக் காலமாக இந்த தஞ்சாவூர் கண்ணாடி ஓவியத்தைக் கற்றுக் கொள்வதற்கு நிறைய பேர் ஆர்வமாக முன் வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதைக் கற்றுக் கொண்ட பலர் தொடர்ந்து இக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறிய ஓவியமாக இருந்தால் ரூ. 300-ம், பெரிய ஓவியமாக இருந்தால் ரூ. 10 ஆயிரம் வரையும், கண்ணாடி கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கு வரையும்போது ரூ. 20 ஆயிரம் வரையும் வருவாய் கிடைக்கும். சிறிய வகை ஓவியத்தை சில நாள்களில் வரைய முடியும். பெரிய ஓவியத்துக்கு ஒரு வாரமாகும்'' என்கிறார் குமரேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT