தர்ஷன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நிழற்குடை'. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே. எஸ். அதியமானிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ்குமார், வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தர்ஷன் சிவா என்ற புதுமுகம் வில்லனாக நடித்துள்ளார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது...
'பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் என் படத்தில் நடித்துள்ள குழந்தைகள் இருவருமே தேவயானிக்கு ஈடு கொடுத்து இயல்பாக நடித்துள்ளார்கள். நான் முதன் முதலாக உதவி இயக்குநராக பனியாற்றிய படம் "தொட்டாசினுங்கி'. அந்த படத்தில் தான் தேவயானி கதாநாயகியாக அறிமுகமானார், பல வருடங்களுக்கு பின் நான் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது.
குடும்ப உறவுகளின் மேன்மையை இப்படத்தின் மூலம் பேச இருக்கிறேன். உறவுகளின் உணர்வுகளை துல்லியமாக கடத்தும் விதமாக இதன் திரைக்கதை இருக்கும். இதன் ஆடியோ உரிமையை மாஸ் ஆடியோ நிறுவனமும் வெளிநாட்டு உரிமையை கஃபா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. தமிழ்நாடு, புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளன. திரையரங்குகளில் இப்படம் மே 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது'' என்றார் சிவா ஆறுமுகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.