திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வே.சிவானந்தம் ஆவுடையம்மாள் தம்பதியரின் இரட்டையர்களான வே.சி.ரிஷிவேலு, வே.சி.மகாகோமு பிளஸ் 2 பொதுத்தேர்வை விரைவில் எழுத உள்ளனர்.
இவர்கள் ஓய்வு நேரத்தில் தங்களது ஓவியத் திறமையை வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்தி, சாதித்துள்ளனர். இவர்கள் வரைந்த ஓவியங்கள் தத்ரூபமாகவே காட்சியளிக்கின்றன.
தமிழ்நாட்டில் இதுவரையில் பதவிவகித்த முதல்வர்களைப் பெரிய அளவில் ஓவியங்களாக தத்ரூபமாக வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் பல பள்ளிகளில் கண்காட்சிகளாக வைக்கப்பட்டுவருகின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் அவரின் உருவத்தை 21 ஓவியங்களாக 21 விதமான பொருள்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர்.
அண்மையில் திருநெல்வேலிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தச் சாதனை இரட்டையர்கள் சந்தித்து தங்களது படைப்புகளைக் காட்டி உள்ளனர். முதல்வரும் தனக்குப் பிடித்த மூன்று படைப்புகளைக் கேட்டு பெற்றுகொண்டார்.
இருவரில் வே.சி.ரிஷி தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் 202324 ஆம் ஆண்டுக்கான 'கலை இளமணி விருதை பெற்றுள்ளார்.
இதுகுறித்து வே.சி. ரிஷிவேலு, வே.சி. மகாகோமு கூறியது:
'சிறுவயதிலேயே யோகா கற்றோம். போட்டிகளிலும் பங்கேற்றோம். ஆரம்பப் பள்ளி காலங்களிலேயே எங்களுக்கு ஓவியம் வரைவதில் நாட்டம் இருந்தது. அதில் ஒன்பதாம் வகுப்பு முதல் முனைப்புடன் ஈடுபட்டோம். கரோனா காலத்தை பயனான காலமாக மாற்றினோம்.
அப்போது தோன்றியது தான் முதல்வர்களின் உருவங்களை ஓவியங்களாக வரைய வேண்டும் என்கிற எண்ணம். பிளஸ் 2 முடித்துவிட்டு, பி.ஆர்க் படிக்க உள்ளோம்.
எங்களது திறமைகளைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகளிடம் இருந்து இருநூறுக்கும் அதிகமான சான்றிதழ்களையும், எழுபதுக்கும் மேலான பரிசுக் கேடயங்களையும் பெற்றுள்ளோம்' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.