முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற...

மதுரை தல்லாகுளத்தில் காந்தி மியூசியம் எதிரேயுள்ள மாநகராட்சிப் பூங்காவில், 'மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த படிப்பக வளாகம்', 'இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளைப் பெறவேண்டும்' என்ற நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

Updated On : 30 நவம்பர், 2025 at 12:01 AM
பகிர்:
Updated On : 29 நவம்பர், 2025 at 8:53 PM

மதுரை தல்லாகுளத்தில் காந்தி மியூசியம் எதிரேயுள்ள மாநகராட்சிப் பூங்காவில், 'மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த படிப்பக வளாகம்', 'இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புகளைப் பெறவேண்டும்' என்ற நோக்கத்தில் இரண்டு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. எப்போதும் சுமார் 500 பேர் படித்துக் கொண்டே இருப்பர். குண்டூசி விழுந்தாலும்கூட சப்தம் கேட்கும். அத்தனை நிசப்தம்.

'நமக்கு நாமே' திட்டம் மூலமாக போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்தில் ஆறு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல தேவையான வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே மிகப்பெரிய பொதுப் படிப்பகம் மதுரையில் உள்ளதுதான்.

ரோட்டரி சங்கத்தின் மதுரை மிட் டவுன் கம்யூனிட்டி டிரஸ்ட் தலைவர் மதன் கூறியது:

Advertisement

'இந்த வளாகத்தில் மாணவ - மாணவியர், வேலை தேடும் இளையத் தலைமுறையினர் மட்டுமே வர முடியும். பொழுதுபோக்குக்காக இங்கு யாரும் வர முடியாது. தினமும் சுமார் 500 முதல் 800 இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கான நூல்களை வாசிக்கிறார்கள்.

Updated On : 29 நவம்பர், 2025 at 8:54 PM

மரங்கள் அதிகமாக இருக்கும். அமைதி நிலவும் இந்த வளாகத்தில் மின் விசிறிகள், கணினி வசதிகள் அனைத்தும் உண்டு. கணினியை ஒருவர் ஒருமணி நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையான விஷயங்களைப் பதிவிறக்கம் செய்து, இலவசமாகப் பிரதி எடுத்துக் கொள்ளலாம். வாசிக்க வருவோர் சுறுசுறுப்பாக இருக்க முற்பகல், பிற்பகல் தேநீர் அல்லது மோர் வழங்கப்படும். மதியம் சுண்டலும் சேர்த்து வழங்கப்படுகிறது.

நாளிதழ்களுடன் சுமார் 2500 நூல்கள் இங்குள்ளன. தேவையான நூல்களின் தகவல்களைத் தந்தால் அந்த நூல்களை வாங்கி வைக்கிறோம்.

வெளியூரில் இருந்து வருவோர் மதிய உணவு கொண்டுவந்து சாப்பிட டைனிங் ஹால் வசதிகளைச் செய்து தந்துள்ளோம். கழிவறை வசதி, குடிநீர் வசதிகளும் உண்டு. பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படுவதோடு, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டும் வசதியும் செய்துதரப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் காவல் துறையினர் வந்து செல்வதால் இளம்பெண்கள், மாணவிகள் படிப்பகத்துக்கு வந்து செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை.

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஐம்பது லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். வளாகம் தூய்மையாக இருப்பதற்குக் காரணம் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகம்தான். இங்கு வாசித்துச் சென்ற பலருக்கு அரசு வேலைகள் கிடைத்துள்ளன.

நூல்களை வாசிக்க வருபவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். அநாவசியமாக யாரும் பேசிக் கொள்வதில்லை. மாணவிகள் சுமார் 200 பேர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்'' என்கிறார் மதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.