பெண்களின் உலகம்
மலையாளத்தில் இப்போது மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய உருவாகி வருகின்றன.
மலையாளத்தில் இப்போது மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் நிறைய உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையை நம்பி உருவாக்கப்பட்டு பெரிய வணிக வாய்ப்பை எட்டியுள்ளன. அந்த வரிசையில் உருவாகி வரும் படம் "பெண்கோடு'. ஜீத்து ஜோசப்பின் "லைஃப் ஆஃப் ஜோசக்குட்டி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அருண் சாக்கோ, இமை, மதர், சரீஷ் தேவு, லட்சுமி சாந்தா, திரவிய பாண்டியன் உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் அருண் ராஜ் பூத்தணல்.
படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'ஆண், பெண் பார்வை இரண்டும் ஒன்றல்ல. வெவ்வேறானவை. இரண்டும் தனித்தனியானவை என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. கண்களால் ஆண் பார்ப்பதை பெண் இதயத்தால் பார்க்கிறாள். அழகை, ஆண் குணமாகப் பார்க்கிறான்.
பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள். இப்படி ஆண், பெண் இடையே பார்வையில், எண்ணங்களில் வேறுபாடு உண்டு. பெண்களுக்கு பிரத்யேகமான சில எண்ணங்கள் உள்ளன. அவர்களுக்கு என்று குறியீடுகள், சங்கேதங்கள், சமிக்ஞைகள் உள்ளன. அவற்றை அவர்களின் உலகத்தில் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும். இதை மையமாகக் கொண்டு இப்
படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாளப் படக்குழுவினரால் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. வயநாடு, ஊட்டி, திருவனந்தபுரம் என கேரளாவின் பசுமை சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.'' என்றார் இயக்குநர்.