சஞ்சு சாம்சன் இல்லாதது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மிகப் பெரிய இழப்பு: டு பிளெஸ்ஸி
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பு என ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பு என ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளதால், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி அவர்களது அணிகளுக்கு மிகவும் முக்கியமான வீரர்களோ, அதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரர் சஞ்சு சாம்சன் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரைப் பார்த்தால், ஒவ்வொரு அணியிலும் மிகவும் முக்கியமான இந்திய வீரர் ஒருவர் இடம்பெற்றிருப்பார். ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்ற வீரர்கள் அவர்களது அணிகளுக்கு மிகவும் முக்கியமான வீரர்களாக இருந்து வருகிறார்கள். என்னைப் பொருத்தவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிகவும் முக்கியமான வீரராக சஞ்சு சாம்சன் இருந்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக அறிமுகமாகி, சஞ்சு சாம்சன் அந்த அணியின் அடையாளமாக மாறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நினைத்தாலே, பலருக்கும் சஞ்சு சாம்சன் முகம் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன். அதனால், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரிய இழப்பாகும். ஏனெனில், ராஜஸ்தான் ராயல்ஸின் வளர்ச்சிக்கு அவர் மிகவும் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்றார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் 11 சீசன்களாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.