இழக்க எதுவுமில்லை...
இங்கிலாந்தின் லிவர்பூலில் நடந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் ஜெய்ஸ்மின் லம்போரியா.
பிஸ்மி பரிணாமன்
செப்டம்பர் 13. இங்கிலாந்தின் லிவர்பூலில் நடந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்றவர் ஜெய்ஸ்மின் லம்போரியா. 57 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் ஜூலியா ஸ்ùஸரெமெட்டாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து, தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஜூலியா 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
'வெற்றியின் சந்தோஷ உணர்வை முழுவதுமாக வெளிப்படுத்த என்னால் இயலவில்லை. உலக சாம்பியன் ஆனதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2024 பாரிஸ் ஒலிம்பிக்சில் தொடக்கத்தில் போட்டியிலிருந்து நான் வெளியேறியதும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு வருட கால தொடர்ச்சியான உழைப்பின் பலன்தான் இந்தத் தங்கப் பதக்கம்'' என்கிறார் ஜெய்ஸ்மின் லம்போரியா.
அவர் மேலும் கூறியது:
'என் கொள்ளுத் தாத்தா ஹவா சிங் ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரர். இரண்டு முறை ஆசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். தாத்தா, கெளரவ கேப்டன் சந்தர்பன் லம்போரியா, அவரும் மல்யுத்த வீரர். எனது மாமாக்களான சந்தீப் சிங், பர்விந்தர் சிங் தான் எனது பயிற்சியாளர்கள். தாத்தா என்னை குத்துச் சண்டை பயில அனுமதித்தார்.
அப்பா ஜெய்வீர் லம்போரியா "ஒப்பந்த காவலர்' ஆகப் பணி புரிகிறார். அம்மா ஜோகிந்தர் கவுர் வீட்டைக் கவனித்துக் கொள்கிறார். 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது, எனக்கு லைட்வெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பாங்காக்கில் நடந்த உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச் சுற்றில் 57 கிலோ பிரிவில் காலிறுதியில் மாலியின் மரைன் கமாராவை தோற்கடித்ததன் மூலம், 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றேன்.
ஆரம்ப சுற்றில் தோல்வி அடைந்தேன். பிறகு உலக சாம்பியன் தகுதிச் சுற்றில் 60 கிலோ பிரிவில் போட்டியிட்டேன். இறுதிச் சுற்றின் போது, நான் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருக்கு எதிராளியாக நிற்கிறேன் என்று தெரியும். அவரை எதிர்ப்பது கடினமான சவால் என்பதும் எனக்குத் தெரிந்தே இருந்தது.
ஆனால் தோற்க எனக்கு விருப்பம் இல்லை. இழக்கவும் என்னிடம் எதுவும் இல்லை. ஆனால், பெறுவதற்கு பலதும் உண்டு. அந்த உறுதியில் மோதி ஜூலியா ஸ்ùஸரெமெட்டாவை வீழ்த்தினேன்
என்றாலும் என்னால் நம்ப முடியவில்லை'' என்கிறார் ஜெய்ஸ்மின் லம்போரியா.