திரைக் கதிர்
தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் விமர்சித்தும் வருகிறார்கள்.
தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் விமர்சித்தும் வருகிறார்கள். இயக்குநர் பா. ரஞ்சித், கோபி நயினார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் இந்த விருது அறிவிப்புப் பட்டியலை விமர்சித்துப் பேசியிருந்தார்கள்.
2016ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான முதல் பரிசு 'அறம்' திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, அப்படத்துக்கு இன்னும் சில விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு அவ்வாண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்படவில்லை.
விஜய்யின் கடைசிப் படமான 'ஜன நாயகன்' இம்மாதம் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து ஹெச். வினோத், தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. தனுஷ் இப்போது 'போர்த்தொழில்' விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை முடித்துவிட்டு அவர் ஹெச்.வினோத்தின் படத்துக்கு வருவார் என எதிர்பார்ப்பு உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சாய் அபயங்கர், ஸ்ரீலீலா அப்டேட்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவர உள்ளன. அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. டி55 படத்தை முடித்துவிட்டு டி56 படமாக ஹெச்.வினோத் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு 2012-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2023-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. தற்போது இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தையர் பிறந்திருக்கின்றனர்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் சிரஞ்சீவி, ''மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் நிறைந்த இதயத்துடன், ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். '' எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடித்திருக்கும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரவிந்த் சுவாமி சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அப்போது இவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். அது குறித்து மெல்போர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் பேசியிருக்கிறார் அரவிந்த் சுவாமி.
''2005-இல் எனக்கு ஏற்பட்ட காயத்தால் ஒன்றரை வருடம் மிகுந்த வலியுடன் படுக்கையில் கிடந்தேன். அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என்று நான் தேர்ந்தெடுத்ததால்தான் இவ்வளவு நாட்கள் வலியில் இருந்தேன். ஆயுர்வேதத்தில் பழங்கால ஞானம் இருக்கிறது. அது எனக்கு உதவியது. அதேபோல் அலோபதி மருத்துவத்திலும் பெரும் ஞானம் உள்ளது. அது எனக்கு பலமுறை உதவியிருக்கிறது'' எனக் கூறியிருக்கிறார்.