தமிழ்மணி

சொல் புதிது - 4

தேர்தல் நேரம் மேடைகளில் மதச் சார்பற்ற அரசு எனும் முழக்கங்கள். உண்மையிலேயே இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கிறதா?

முனைவர் ம. இராசேந்திரன்

தேர்தல் நேரம் மேடைகளில் மதச் சார்பற்ற அரசு எனும் முழக்கங்கள். உண்மையிலேயே இந்தியா மதச் சார்பற்ற நாடாக இருக்கிறதா?

தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத், மகாவீர் ஜெயந்தி,புத்த பெளர்ணிமா பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடுகிறது. ஆட்சியில் உள்ளவர்கள் வாழ்த்துகிறார்கள்! ஹஜ் யாத்திரை, ஜெருசலம் மற்றும் இந்துப் புனிதத் தலங்களுக்குப் பக்தர்கள் சென்று வர அரசு நிதி உதவி செய்கிறது! இவ்வளவுக்குப் பிறகும் இந்தியாவை எப்படி மதச் சார்பற்ற நாடு என்று சொல்கிறார்கள்?

மதச் சார்பற்ற நாடு என்றால், எந்த மதத்தையும் ஆதரிக்காத நாடு என்று பொருளா? எல்லா மதத்தையும் ஆதரிக்கும் நாடு என்று பொருளா? இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில் நங்ஸ்ரீன்ப்ஹழ்ண்ள்ம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா, நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய் நர்ஸ்ரீண்ஹப்ண்ள்ற் நங்ஸ்ரீன்ப்ஹழ் ஈங்ம்ர்ஸ்ரீழ்ஹற்ண்ஸ்ரீ தங்ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ஆக மாறியுள்ளது.

உலகமயமாதல் சூழலில் எந்த ஒரு நாடும் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வாழும் நாடாக இருக்கும் வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கின்றன. அரசியல், பொருளாதார, வணிக ஈடுபாடுகள் பல மதத்தவர்களும் ஒரே நாட்டில் வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்தியா, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்துள்ள நாடு இல்லை என்பதுதான் அரசமைப்புச் சட்டம் அறிவிக்கும் செய்தி. ஆனால், மதச்சார்பற்ற நாடு என்றால் அந்தப் பொருள் வரவில்லை.

மதம் என்பது மக்களின் தனிப்பட்ட ஆன்மிகத் தேடலுக்கான இறைக் கோட்பாடு. அரசு என்பது மக்கள் அனைவருக்குமான இறையாண்மை.

செக்குலரிசம் உயர்ந்த கோட்பாடாகும். அது எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் அடுத்தவர் தலையீடு இல்லாத சுதந்திரம். அது மக்கள் தமக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றி வாழ முழு உரிமை அளிப்பது. ஆட்சியாளரின் மதச் சார்பு, மற்ற மதத்தவர்களிடம் வேற்றுமையைக் காட்ட அனுமதிக்காதது; ஒரு மதத்தின் கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்குமான பொதுச் சட்டம் உருவாக வாய்ப்பளிக்காதது. ஒரு மதத்தின் நெறிகளை மற்றவர்களிடம் திணிக்காதது. பெரும்பான்மை, சிறுபான்மை அடிப்படையில் தலையீடு செய்யாதது. வாய்ப்புகளிலும் உரிமைகளிலும் எல்லா மதத்தினருக்கும் ஒத்த உரிமை வழங்குவது. அவரவர் மதத்தின் வழிபாட்டு முறைகளிலும் சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் குறுக்கீடு செய்யாதது. அரசின் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குமுறையில் அமைய இடம் தராதது. அரசியல் கோட்பாடுகள், பொருளாதாரக் கொள்கைகள், சமுதாய வளர்ச்சியில் பங்கு, அறிவியல், கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் பொதுத் தன்மையைக் காப்பாற்றுவது. பிற மதங்களின் மீது காழ்ப்புணர்வு கொள்ளாதது.

இவ்வாறு பரந்து விரிந்த பொருள் தரும் செக்குலரிசம் என்பதை மதச் சார்பற்ற என்று தமிழில் சொல்லும்போது எந்த மதத்தையும் சாராத என்றும், மதமற்ற என்றும், மதத்தொடர்பற்ற என்றும்தான் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, செக்குலரிசம் என்பதற்கு வேறு சொல் தேவைப்படுகிறது.

"செக்குலரிசம்' என்ற சொல்லுக்கு வாசகர்கள் அனுப்பிய தமிழ்ச் சொற்கள் வருமாறு:

கோ. மன்றவாணன், வெ.ஆனந்த கிருஷ்ணன், டி.வி.கிருஷ்ண சாமி, சோலை.கருப்பையா, சி.இராமச்சந்திரன், இரா.பொ. வீரையன், செ.சத்தியசீலன் - சமயச் சார்பின்மை / மதச் சார்பின்மை.

முனைவர் பா. ஜம்புலிங்கம் - இறை மறுப்பு சமூகக் கொள்கை.

முனைவர் க.அன்பழகன் - சமயமில் கோட்பாடு.

கா.மு. சிதம்பரம் - சமய வரைகோள்.

என்.ஆர். ஸத்திய மூர்த்தி - சமயப் பொறை.

எம்.சிவரஞ்சனி, சோ.முத்து மாணிக்கம் - சமயச் சார்பின்மைக் கோட்பாடு.

ஐரோப்பாவில் கிறித்துவ நிறுவனங்கள் அரசின் செயற்பாடுகளில் தலையிட்டமையை எதிர்த்து உருவாகிய கோட்பாடு செக்குலரிசம். 1851-இல் இச்சொல் பிறந்திருக்கிறது. ""யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்பதுதான் செக்குலரிசம்.

தமிழகத்தில் சங்க காலத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது. ஒவ்வொரு திணைக்கும் வெவ்வேறு கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. பிற கடவுள் வழிபாட்டைப் பழித்ததற்கான சான்றுகள் இல்லை. இராசராசன் பெரிய கோயிலைக் கட்டியதோடு புத்த விஹாரைகளுக்கும் நிவந்தங்கள் வழங்கியுள்ளான்.

இந்தியாவில் அக்பர் அரண்மனையில் இந்துக்கள் உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். "அனைவருடனும் நேயம்' எனும் கோட்பாட்டைப் பின்பற்ற முனைந்திருக்கிறார்.

அலாவுதின் கில்ஜியின் ஆட்சியில் உலமாப் பெருமக்களின் அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாது அனைவருக்கும் பொதுவான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதம், அரசின் செயற்பாடுகளில் தலையீடு செய்யக்கூடாது என்பதைப் போலவே அரசும் மத நடவடிக்கைகளில் / நம்பிக்கைகளில் தலையீடு செய்யக்கூடாது என்பதுதான் செக்குலரிசத்தின் உண்மையான கோட்பாடாக இருக்கிறது. இந்தக் கோட்பாட்டைக் கொண்ட அரசு, மதச் சார்பற்ற அரசு என்று அழைக்கப்படுவதை விட மதத் தலையீடற்ற அரசு என்றே அழைக்கப்பட வேண்டும்.

மதம், அரசு இரண்டும் ஒன்றின் நடவடிக்கையில் மற்றொன்று தலையிடாதிருப்பதே செக்குலரிசம். எனவே, செக்குலரிசம் என்பதற்கான தமிழ்ச் சொல் மதத்தலையீடின்மை என்பதாக இருப்பதே சரியானதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT