முகப்பு
தமிழ்மணி

சொல் தேடல் -16

வாழ்க்கைத் தொடருக்குப் பிறப்பு எழுவாய்; இறப்பு வினைமுற்று. எல்லாத் தொடர்களும் ஒன்றுபோல் இல்லை. சில தொடர்கள் செறிவான சிறிய தொடர்கள்! சில பொருளற்ற நீண்ட

Updated On : 12 ஜூலை, 2015 at 1:19 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:47 AM

வாழ்க்கைத் தொடருக்குப் பிறப்பு எழுவாய்; இறப்பு வினைமுற்று. எல்லாத் தொடர்களும் ஒன்றுபோல் இல்லை. சில தொடர்கள் செறிவான சிறிய தொடர்கள்! சில பொருளற்ற நீண்ட தொடர்கள்! மிகச்சில பொருள் பொதிந்த நீண்ட தொடர்கள்! தொடரின் அளவில் இல்லை முதன்மை; உள்ளடக்கத்திலேயே இருக்கிறது. 24 ஆண்டுகளே வாழ்ந்தவன் ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ். முப்பதாம் அகவையை எட்டாமலேயே கொடுங்கூற்றுக்கு இரையானவர் பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம். இவர்கள் மறைந்தும் மறையாத மாமணிகள்! வியப்புக் குறிகள்! ஒருவரது பெயர் செய்யும் வினையாலேயே உலகம் போற்றும் தகுதி வழக்காய் மாறுகிறது.

உயர்வுக்கு மூலதனம் உழைப்பே. ""உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?'' என்று தட்டி எழுப்புகிறது திருமுறை (பட்டினத்தார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, பா. 10). உழைப்பால் ஊழையும் உப்பக்கம் காணலாம் என்று ஊக்கமூட்டுகிறது தமிழ்மறை. உடல் ஊனம் உயர்வுக்குத் தடையில்லை. காதுகேளாத பிதோவன் உலகம் போற்றும் "பல்லியப் படைப்பு'களைத்  (Symphony)  தந்ததும், கண்பார்வையில்லாத அந்தகக் கவி வீரராகவ முதலியார் பரிசுமழையில் நனைந்ததும் பழைய வரலாறு. பார்வையற்ற தமிழகப் பெண்மணி என். எல். பீனோ செபின் (N.L.Beno Zephine)  இந்திய அயலகப் பணியில் இடம்பிடித்திருப்பதும், குடிமைப் பணித்தேர்வில் தில்லியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் ஐரா சிங்கால் முதலிடம் பெற்றிருப்பதும் பாராட்டுக்குரிய இன்றைய நிகழ்வுகள்.

இது போட்டி நிறைந்த உலகம். இங்கு வல்லவர்களுக்கே வாழ்வு. பந்தயத்தில் முதலில் வந்தவர்களுக்கே பாராட்டு, பரிசு, மாலை, எல்லாம்! இந்த உண்மையை உள்ளத்தில் எழுதிக்கொண்டவர்களே உயர்கிறார்கள். உலகம் உறங்கும்போதும் உழைத்துக் கொண்டிருப்பவர்களே உன்னதத்தின் உச்சியில் கால் ஊன்றுகிறார்கள்.

Advertisement

இன்றைய மாணவர்கள் இருவகை. அறைகூவலை ஏற்று இலக்கை நோக்கித் துடுப்பைப் போட்டுப் படகைச் செலுத்துபவர்கள் ஒருவகை. தங்கள் பயணத்திற்கு இசைவான காற்றை மட்டுமே நோக்கிக் கலத்தில் ஏறிக் காத்திருப்பவர்கள் மற்றொரு வகை. முதல்வகை மாணவர்கள் மிகுதியாக உழைக்கிறார்கள். அவர்களுக்குப் படிப்பு ஒரு தவம். அவர்கள் தவத்தைக் கிரிக்கெட், தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற எந்த மேனகைகளாலும் கலைக்க முடிவதில்லை. அவர்கள் விளையாட்டில்கூட நேரத்தைக் கழிப்பதில்லை. இரண்டாம் வகையினர் போட்டி போட ஆயத்தமாகும் முனைப்பு இல்லாதவர்கள். அவர்கள் கவர்ச்சி வலையில் வீழ்கிறார்கள். எப்படியோ வாழ்கிறார்கள்.

முன்பெல்லாம் மாணவர்கள் கணக்கில்தான் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவார்கள். ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிப்பாடங்களில் நூற்றுக்கு நூறு தருவது இல்லை. எல்லா விடையும் சரியாக இருந்தாலும் கையெழுத்து சரியில்லை என்று ஐந்து மதிப்பெண்களாவது குறைவாக வழங்குவார்கள். இன்று எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு பெறும் நிலை இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் நிறுவனத்தில் படித்து முதன்மையாகத் தேறிச் சிறப்புத் தேடித் தந்த மாணவர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வண்ணமுற எழுதிப் பலரும் பார்க்கும்படி வைத்து அம்மாணவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கம் ஊட்டுகிறார்கள். சில நிறுவனங்கள் அத்தகைய மாணவர்களின் நிழற் படத்தையும் பெயரையும் நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி மாணவர்களைத் தங்கள் நிறுவனத்தில் சேரும்படி அழைக்கிறார்கள். சில தொழில் நிறுவனங்கள் தங்கள் செயல்களால் நிறுவனத்திற்குப் புகழ்சேர்த்தவர்கள் படங்களை வெளியிட்டுப் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றன. இப்படித் தங்கள் நிறுவனத்திற்குப் பெருமைசேர்த்து எடுத்துக்காட்டாகத் திகழும் உயர்நிலையினரைக் குறிக்கும் சொல்லே ailblazer.

ailblazer ன்பதற்குச் சந்திரா மனோகரன் குறித்துள்ள வழிகாட்டிக் கூட்டிச் செல்பவர் என்னும் தமிழாக்கம் தொடராக உள்ளது. என்.ஆர். ஸத்யமூர்த்தி தந்துள்ள அதராளன் என்பது இலக்கியச் செழுமையானதாகவும், சாயி கிரிதர் பரிந்துரைத்துள்ள வழிஞர் என்பது சுருக்கமானதாகவும் இருந்தபோதிலும், முழுமையான பொருளைத் தருவனவாய் இல்லை. கோ. மன்றவாணன் குறித்திருக்கும் வழிகோலர் என்னும் சொல் யான் கருதியிருந்த தடம் பதித்தவர்கள் அல்லது முன் ஏர்கள் என்னும் சொல்லினும் சிறப்பாக இருந்தது. அதனினும் கா. மு. சிதம்பரம் குறித்திருந்த புகழ்க்குறி புதுக்கியோர் என்பது என்னைப் பெரிதும் ஈர்த்தது. அதனையே பெரும்பாலும் இறுதிசெய்துவிட்டேன். மீண்டும் நண்பர்கள் தந்த தமிழாக்கங்களை ஆய்ந்தேன். அப்போது சாயி கிரிதர் தந்திருந்த தமிழாக்கத்தினும் அவர்  Trail என்றால் சுவடு என்றும், Blaze  என்றால் ஒளி, தீபம், தீ என்றும் பொருள்படும் என்று எழுதியிருந்த குறிப்பு என்னை ஈர்த்தது. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தமிழறிஞர்கள் குறித்து எழுதிய நூலுக்குத் "தமிழ்ச் சுடர்மணிகள்' என்று பெயரிட்டுள்ளது நினைவுக்கு வந்தது.

கா.மு. சிதம்பரத்தின் தமிழாக்கம், சாயி கிரிதரின் சொற்பொருள் விளக்கம், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை நூலின் பெயர் இவை மூன்றும் தங்களுக்குப் பின்னே புகழ் என்னும் தடத்தைப் பதித்துச் செல்லும் ailblazer.  ஐப் புகழ்ச் சுடர் என்று குறிப்பது பொருத்தமாக இருக்கும் என்னும் முடிவுக்கு வரச்செய்தன. புகழ்ச் சுடர் ஒருமை; புகழ்ச் சுடர்கள் பன்மை.

ailblazer  - புகழ்ச் சுடர்

அடுத்த வாரத்திற்குரிய சொல்

Aerobics(ஏரோபிக்ஸ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.