முகப்பு
தமிழ்மணி

கம்பரின் சொல்லாட்சி

கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில், விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:00 AM
பகிர்:

கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில், விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல்.

""அங்கதம் இல்லாத கொற்றத்து

அண்ணலும் அகிலம் எல்லாம்

அங்கதன் என்னும் நாமம்

அழகுறத் திருத்து மாபோல்

அங்கதம் கன்னல் தோளாற்கு

அயன் கொடுத்ததனை ஈந்தான்

அங்கதன் பெருமை மண்மேல்

ஆர் அறிந்து அறைய கிற்பார்''

இப்பாடலில் "அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும், "அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு பொருள்களில் கம்பர் கையாண்டுள்ளார்.

முதல் அடியில் உள்ள "அங்கதம்' என்பதற்குக் "குற்றம்' என்று பொருள். மூன்றாம் அடியில் உள்ள "அங்கதம்' என்பது "தோள்வளை' எனும் அணிகலனைக் குறிக்கும். இரண்டாம் அடியில் உள்ள "அங்கதன்' என்பது வாலியின் மகனான "அங்கதனை'க் குறிக்கும். நான்காம் அடியில் உள்ள "அங்கதன்' என்பதை "அங்கு அதன்' எனப் பிரித்து அங்கு இராமன் செய்த செயலைக் காட்டுவதாகப் பொருள் கொள்ளலாம்.

"குற்றம் இல்லாத வெற்றியை உடைய அண்ணலான இராமன், உலகம் எல்லாம் அங்கதன் என்ற பெயர் சிறந்து விளங்குமாறு, மலை போன்ற தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்குப் பிரமன் கொடுத்த அங்கதம் என்னும் தோள்வளை என்ற அணிகலனை அளித்தான். அங்கு இராமன் செய்த அச்செயலின் பெருமையை உலகில் அறிந்து கொள்பவர் யார்?' என்பதே பாடலின் பொருளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.