"நாகமென' நின்றான்!
ஒரே சொல் பல பொருள்களைக் கொண்டிருப்பது எல்லா மொழிகளிலும் உண்டு. அச்சொற்களைக் கவிதையில் பல பொருள்களில் பயன்படுத்துவது சிலேடை இன்பத்தை அதிகரிக்கும்.
ஒரே சொல் பல பொருள்களைக் கொண்டிருப்பது எல்லா மொழிகளிலும் உண்டு. அச்சொற்களைக் கவிதையில் பல பொருள்களில் பயன்படுத்துவது சிலேடை இன்பத்தை அதிகரிக்கும். எடுத்துக்காட்டுக்கு "நாகம்' என்ற சொல். இதற்கு பாம்பு, யானை, மலை முதலிய பொருள்கள் உண்டு.
கல்கியின் "சிவகாமியின் சபதத்தில்' பரஞ்சோதியை நாகநந்தி முதலில் பாம்பு தீண்டாமல் காப்பாற்றுவார். அதன் பின் பரஞ்சோதி, ஆயனரையும் சிவகாமியையும் யானை தாக்காமல் காப்பாற்றுவான். பின் ஆயனர் பரஞ்சோதியை நாகநந்தியிடம் அறிமுகப்படுத்தும்போது, ""ஆயனர் தங்கள் பெயரோ நாகநந்தி. தாங்கள் இவனை நாகம் தீண்டாமல் காத்தீர். இவன் எங்களை நாகம் கொல்லாமல் காத்தான்'' என்பார்.
இதேபோல் கம்பராமாயணத்தில் அகத்தியரைப் பற்றிச் சொல்லும்போது வருகிறது. அகத்தியர் வடநாட்டில் இருந்து தென்னாடு வருகிறார். அப்போது விந்தியமலை இமயத்திற்குப் போட்டியாக வளர்ந்து கொண்டிருந்தது. யோகிகள் விந்திய மலையைக் கடந்து செல்ல உதவுமாறு அகத்தியரிடம் கேட்கிறார்.
அதற்கு அகத்தியர், ""நான் திரும்பி வரும் வரை வளரக்கூடாது'' எனக் கூறி அம்மலையைக் காலால் அழுத்தினார். பின் தென்னாட்டிலேயே தங்கிவிட்டார்.
இதனைக் கம்பர் "நாகமது நாகமுற நாகமென நின்றான்' என்று பாடுகின்றார்.
விந்திய மலையானது பாதாளத்தில் உள்ள நாகலோகத்தை அடையுமாறு அழுத்தி அதன் மேலே யானை போல் அகத்திய முனிவர் நின்றார்.' அப்பாடல் வருமாறு:
யோகமுறு பேருயிர்கள்தாம்,
"உலைவுறாமல்
ஏகுநெறி யாது?' என,
மிதித்து அடியின் ஏறி,
மேகநெடு மாலை தவழ்
விந்தம் எனும் விண்தோய்
நாகமது நாகமுற நாகமென நின்றான்.