பொருள் உதவி கோருபவர்கள், நாட்டுக் கோட்டை நகரத்தார் தொழில்புரியும் ஊர்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அறிமுக - உதவிக் கடிதம் வாங்கிச் சென்று, பொருள் பெறுவது வழக்கம்.
ஒருவர் வட இந்தியாவுக்குச் செல்ல விரும்பி, பல ஊர்களுக்குக் கடிதங்கள் பெற்றார். அப்படியே, வங்காளத்துக்குப் போவதற்காக வித்துவான் நாகப்ப செட்டியாரிடம் அறிமுகக் கடிதம் கேட்டார்.
வங்காளத்தில் கதிரேசன் செட்டியார் என்பவர் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். அவர் வித்துவான் நாகப்ப செட்டியாருக்கு நண்பர். அவருக்கு எழுதிக் கொடுத்ததே கீழ்க்காணும் பாடல்.
உத்தமர்க்கு ஒன்று ஈயின் அது ஒன்று பத்து நூறு என்று
எத்திறத்து நூலும் இயம்புதலால் - மித்திரரில்
சொல் தவறா நம் கண் சுகுணா கதிரேசா
கற்றறிவாய் நீ இதனைக் காண்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர் திருவாரூர் கனகசபை ஐயர் அவரிடம் கல்வி பயின்றார் வித்துவான் நாகப்ப செட்டியார். மேற்படி கனகசபை ஐயர் அவர்கள் "திருவாரூர்ச் சிலேடை வெண்பா' என்ற நூலை இயற்றினார். அந்நூலை தம் பொருட் செலவில் அச்சிட்டு வெளியிட்டார் வித்துவான் நாகப்ப செட்டியார். மேற்படி நூலுக்கு "சாற்றுக்கவி'யும் வழங்கினார்.
திருவாரூ ருக்குச் சிலேடை வெண்பாச் செய்தான்
குருவாய் எனக்கெழுந்த கோமான் - ஒருவாது
அனகமமை கூறை நகர்வீர சைவன்
கனகசபாபதி மால்காண்!
("தேவகோட்டை வித்துவான் நாகப்ப செட்டியார்' என்ற நூலிலிருந்து...)