முகப்பு
தமிழ்மணி

"புறம்போக்கு' மண்ணாசை!

சில மாதங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எண்ணிலடங்கா குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பகிர்:

சில மாதங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எண்ணிலடங்கா குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் உற்ற துயரம் சொல்லில் அடங்காது. மாதம் மும்மாரிப் பெய்ததாகச் சொல்லப்படும் பழங்காலத்தில்கூட, இத்தகைய மழைவெள்ளம் குடியிருப்புகளை பாதித்திருக்குமா? என்பது அறியப்படவில்லை.

வீடுகளை வெள்ளம் சூழ்வதற்குப் பல காரணங்கள்  இருந்தாலும், இலக்கியங்களில் சொல்லப்பட்டவற்றுள் சில, நமது கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றுள் இன்றியமையாத ஒன்று, "புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து அங்குக் குடியேறுதல்'. "உலகநாதர்' எனும் புலவர்,  "உலகநீதி'யில் இதைக் கூறியுள்ளார்.

"செய்யத் தகுந்த செயல்களை வகையறியாமல் முடிக்க முயலாதே! பொய்க்கணக்கை எப்பொழுதும் பேசாதே! சண்டை நடைபெறும் இடத்திற்குத் தேவையின்றி செல்லாதே!' என்றெல்லாம் அறிவுறுத்திச் செல்லும் அவர், "எல்லார்க்கும் பொதுவான இடத்தில் குடியிராதே!' என்று அறிவுறுத்துகின்றார். அதாவது, "பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்' (ஊருக்குப் பொதுவிடத்தில் குடியிருக்காதே!)  (பா.7) என்கிறார். இதைக் கருத்தூன்றிப் படிப்பவர் எவரும், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டடங்களை எழுப்பமாட்டார்கள். 

ஒளவையாரும், தனது பங்குக்கு இது தொடர்பாக "ஆத்திசூடி' யில், "இடம்பட வீடு எடேல்' (18) என்று கூறி, நம்மைச் சிந்திக்க வைக்கிறார். அதாவது, "அளவுக்கு அதிகமாக இடம் இருக்கும்படி வீட்டைப் பெரிதாகக் கட்டாதே!'  என்பது இதன் பொருள்.

ஒருவன், தனக்குச் சொந்தமான இடங்களிலெல்லாம், மண்மூடிப் போகுமாறு கட்டுமானங்களை எழுப்பினால், மழைநீர் உறிஞ்சப்பட வழியில்லாமல் வெள்ளம் ஏற்படுகிறது. தனிமனிதனுக்கு மட்டுமின்றி,  அரசுக்கும் இத்தகைய அறிவுரைகள் மிகவும் பொருந்தும். இத்தகைய அறநூல்களைக் கருத்தூன்றிப் படித்து, அதன்படி நடந்தால், எதிர்காலத்தில் இத்தகைய வெள்ள பாதிப்புகளும், அவற்றால் எழும் துயரங்களும் குறையும் என்பது உறுதி!

முழு கட்டுரையைப் படிக்க →