அறனில் கூற்றுவனே!
தெய்வப் புலவர் திருவள்ளுவர், செய்ந்நன்றியைப் பற்றிக் கூறுமிடத்து
தெய்வப் புலவர் திருவள்ளுவர், செய்ந்நன்றியைப் பற்றிக் கூறுமிடத்து
எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
என்று கூறுகிறார். இந்தக் கூற்று மானிடவர்க்கு மட்டுமின்றி, கூற்றுவனுக்கும் (எமனுக்கும்) பொருந்திவரும் போலும்! ஆம், அப்படித்தான் புறம் "அறம் ' பாடுகிறது.
தகரூர்ப் போரில் கடும் போரிட்ட மன்னவன் எழினி போர்க்களத்தில் வீழ்ந்து வீரமரணம் எய்தினான். அங்குச் சென்ற அரிசில் கிழார் எனும் புலவர் மன்னவனின்உடலைப் பார்த்துக் கதறி அழுகிறார்.
ஈவு இரக்கமன்ற செய்ந்நன்றி கொன்ற கூற்றுவனை, "அறனில் கூற்றுவனே' என்று முன்னிலை விளியில் எமதர்மராஜனைப் பலபடச் சாடுகிறார்.
உலகியல் துன்பத்தையும் உள்ளடக்கிய அப்பாடல் பின்வருமாறு:
ஈன்றோள் நீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றும்
தலைத்தலை யினையக்
கடும்பசி கலக்கிய இடும்பைகூர்
நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகினும்
மிகநனி
நீ இழந்தனையே அறனின் கூற்றம்
வாழ்தலின் வயல்வளம் அறியான்
வீழ்குடி உழவன் வித்து
உண்டாங்கு
ஒருவன் ஆருயிர் உண்ணாய்
ஆயின்
நேரார் பல்லுயிர் பருகி
ஆக்குவை மன்னோ அவன் அமர்
அடுகளத்தே
(புறம் 230)
தாயை இழந்துவிட்ட குழந்தை, தன் சுற்றத்தாரிடம் சென்று பசியால் அழுது வருந்துவது போல, மன்னன் எழினியை இழந்ததால், இந்நாடு முழுவதும் வருந்தி அழுகிறது.
வித்தினை விதைத்து, பயிர் நன்கு விளைந்த பின்பு கிடைக்கப் போகும் வருவாய் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாத நிலையில், விதைநெல்லையே உண்ணும் அறிவில்லாத உழவனைப் போல நீயும் நடந்து கொண்டாயே கூற்றுவனே! உன் பசியாற இதுநாள் வரை, பகைவர் பலரையும் போர்க்களத்தில் கொன்று, உனக்கு உணவாக்கிய அந்த அரசனையே (எழினி) இன்று இப்போர்க்களத்தில் இறந்துபடச் செய்துவிட்டாயே!.
இதுநாள் வரை உனக்கு மிகுதியாக உணவு (உயிர்) கொடுத்து வந்தவனின் உயிரையே இன்று உணவாக்கிக் கொண்டாய்! நீ அறமில்லாதவன்! அறிவற்றவன்!
ஈண்டு கூற்றுவனயே செய்ந்நன்றி கொன்ற அறமில்லாதவன் என்று புலவர் வசை பாடுகிறார்.