குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று!
'உலகம் தோன்றிய காலத்திலிருந்தே "யார் மிகப் பெரியவர்?' என்ற கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு விதமான மக்களாலும் கேட்கப்பட்டு, பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் இக்கேள்விக்கான பதில் பைபிளில்
'உலகம் தோன்றிய காலத்திலிருந்தே "யார் மிகப் பெரியவர்?' என்ற கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு விதமான மக்களாலும் கேட்கப்பட்டு, பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் இக்கேள்விக்கான பதில் பைபிளில் காணப்படுகிறது.
"யார் மிகப் பெரியவர்?' என்ற கேள்வியை இயேசுவின் சீடர்கள் கேட்டனர். அப்போது இயேசு ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி பின் வருமாறு கூறினார். ""நீங்கள் மனந்திரும்பி சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இச்சிறு பிள்ளையைப் போல் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறுபிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார்'' (மத்தேயு 18: 1-5).
""சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்'' என்று கூறிய இயேசுவைப் போன்று சிறுவர்களிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்த ஒரு பெருந்தலைவர்தான் மறைந்த நம் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களும் சிறுவர்களையும், மாணவர்களையும் தன்னிடம் வரவழைத்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி, அவர்கள் மனங்களைத் தன்பால் ஈர்க்கும் சக்தி மிகப் பெற்றவராய் வாழ்வதையும் நாம் கண்கூடாய்க் காண்கிறோமல்லவா?
சிறுவர்களை நேசித்த இயேசு கிறிஸ்து, அவர்களைப் பாவத்தில் விழச் செய்யும் மனிதர்களை வெகுவாகக் கடிந்து கொள்வதையும் பைபிளில் காண்கிறோம். ""என் மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோரில் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டிக் கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது'' (மாற்கு 9:42)
சிறுபிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றியும் பைபிளில் கூறப்பட்டுள்ளது:
""தன் மகனுக்குக் கல்வி புகட்டும் தந்தை, எதிரியைப் பொறாமை அடையச் செய்கிறார். தன் நண்பர்கள் முன் அவன் பொருட்டு பெரிதும் மகிழ்ச்சி அடைவார்'' (சீராக் 30:3)
""ஒழுக்கத்தில் வளர்க்கப்படாமல், இறுமாப்பும் பிடிவாதமும் கொண்ட மக்கள் தங்களின் குலப் பெருமைக்கு அவமானம் கொணர்வார்கள்!'' (சீராக் 22:8)
""இளைஞனாய் இருக்கும்போதே அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே! அவனுடைய தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இராதே! சிறுவனாய் இருக்கும்போதே அவனை அடித்து வளர். இல்லையேல் அவன் அடங்காதவனாகவும், கீழ்ப்படியாதவனாகவும் மாறுவான். அவனால் உனக்கு மனவருத்தமே உண்டாகும்''
(சீராக் 30: 11, 12.)
மனிதர்கள் விண்ணரசில் மிகப் பெரியவர்களாகக் கருதப்படும் சிறுபிள்ளைகளைப் போன்று மாசற்ற மனமும், கபடமற்ற எண்ணங்களும் கொண்டு, வீண் பெருமைக்கு இடம் கொடாமல் சக மனிதரிடம் அன்பு செலுத்தி வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கை வாழ சிறுவர்களையும் பண்படுத்தும் பொறுப்பு, பெரியவர்களான நம்மைச் சார்ந்தது. இதை உணர்ந்து வாழ, இறைவனிடம் தேவையான சக்தி வேண்டி மன்றாடுவோமாக.