காவிரிக் கரையில் கங்கைக் குளியல்!
தனது பக்தியினாலும், கருணையினாலும், தூய உள்ளத்தாலும் கங்கையை தனது வீட்டிற்கே வர வைத்திருக்கிறார் ஒரு மகான்.
தனது பக்தியினாலும், கருணையினாலும், தூய உள்ளத்தாலும் கங்கையை தனது வீட்டிற்கே வர வைத்திருக்கிறார் ஒரு மகான்.
பஜனை சம்பிரதாயத்தில் மும்மூர்த்திகளாய்த் திகழ்ந்த மகாபுருஷர்கள் ஸ்ரீபோதேந்திர சுவாமிகள்,ஸ்ரீதர ஐயாவாள், ஸ்ரீ வேங்கடராம சத்குரு சுவாமிகள். இவர்களே பாகவதர்களால் பஜனாரம்பத்தில் பாடப்படும் குருமார்கள்.
இதில் ஐயாவாள் என்று போற்றப்படும் மகான் ஸ்ரீதரவேங்கடேசாரியர் மைசூர் ராஜ்ஜியத்தில் தனது தகப்பனாருக்குப் பிறகு கிடைத்த திவான் பதவியை தியாகம் செய்தார். உஞ்சவிருத்தி பாகவதராக ஆனார். சிறந்த சிவ பக்தர். தினந்தோறும் லட்சம் சிவநாம ஜபம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர். தனது மனைவியுடன் காவிரிக் கரையில் உள்ள பல தலங்களை தரிசித்தவர், நிரந்தரமாக வாழ்வதற்கு மகான்கள் வாழ்ந்த திருவிசலூர் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். சிவனைப் பற்றி பல ஸ்தோத்திரங்களும், பாடல்களும் இயற்றினார். தாம் ஹரிஹர பேதம் அற்றவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களும் இயற்றியுள்ளார்.
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமியின் தீவிர பக்தராய்த் திகழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்திய ஐயாவாள் வாழ்க்கையில் கங்கையை வரவழைத்தது சிகரமாக உள்ளது. இந்நிகழ்வு நடந்தது ஒரு கார்த்திகை அமாவாசை நன்னாள். இந்த தினம் கங்காவதரண மகோற்ஸவம் என்ற பெயரில் 10 நாட்களுக்கு திருவிசலூர் கிராமத்தில் நடைபெறுகிறது. அப்போது பஜனைகள், உபன்யாசங்கள், கர்நாடகக் கச்சேரிகள் நடைபெறும். புண்ணிய கங்காஸ்னானத்துடன் முடிவடையும்.
இவ்வாண்டு உற்ஸவம் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 13ஆம் தேதியன்று (வியாழன்) கார்த்திகை அமாவாசை அன்று ஐயாவாள் இல்லக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். அன்று கங்காபூஜை, ஐயாவாள் இயற்றிய கங்காஷ்டக ஸ்தோத்திர பாராயணம் முடிந்தவுடன் பக்தர்கள் நாள் முழுவதும் கங்கா ஸ்னானம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்று ஸ்ரீகுருநாதர் ஆராதனையும் நடைபெறும். பக்தர்கள் பங்கேற்று காசியில் கங்கா ஸ்னானம் செய்த பலனைப்
பெறலாம்.
தகவலுக்கு 0435/2461616 மற்றும் 094440 56727.
அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து பேருந்து மூலம் திருவிசலூரை அடையலாம்.