மன்னிப்பவர்கள் மகான்கள்!
மன்னித்தவர்கள் இந்த உலகின் மகான்களாக மாறியுள்ளனர். ஆனால், மன்னிப்பது அல்லது இன்னொருவர் செய்த தவறை மறப்பது என்பது எளிதான காரியமா? நம்மை இழிவுபடுத்தியவர்களை, இகழ்ந்து பேசியவர்களை,
மன்னித்தவர்கள் இந்த உலகின் மகான்களாக மாறியுள்ளனர். ஆனால், மன்னிப்பது அல்லது இன்னொருவர் செய்த தவறை மறப்பது என்பது எளிதான காரியமா? நம்மை இழிவுபடுத்தியவர்களை, இகழ்ந்து பேசியவர்களை, ஏளனம் செய்தவர்களை, ஏமாற்றியவர்களை, வஞ்சித்தவர்களை, வாழ்வைக் கெடுத்தவர்களை மன்னிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இது கடினமான காரியம். ஆனால் இயேசு இப்படிப்பட்டவர்களை மன்னிக்க வேண்டுமென்று கூறுகிறார். ""மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் (மத் 6:15)''.
ஆம்! நாம் பிறர் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. இறைவனிடமிருந்து மன்னிப்பு பெற்று, அருள் மழையில் நாம் நலம் அடைய வேண்டுமென்றால் பிறரை மன்னித்தே ஆக வேண்டும். ""உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்து விடு. அவ்வாறெனில் நீ மன்றாடும்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர் மீது சினங்கொள்கின்றனர். அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? (சீராக் 28: 2-3)''.
இவ்வாறாக, நாம் பிறரை மன்னித்தால்தான் நமக்கு மன்னிப்பு உண்டு என்பதை இறைவன் தெளிவுபடுத்துகிறார். நாம் நம் சகோதரர் சகோதரிகள் செய்யும் குற்றங்களை முழுமனதோடு மன்னிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.
""உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர், சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் (மத் 18:35).'' இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைக்கூட அன்பு செய்தார். அதுவே மன்னிப்பாக வெளிப்பட்டது.
அதுமட்டுமல்ல, அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறார். நாமும் நமக்கு எதிராகத் துரோகம் செய்தவர்களுக்காக மன்றாட வேண்டும். ""தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை (லூக் 23: 34)''.