ஒவ்வொரு முறையும் அமித் ஷா சென்னைக்கு வர முடியுமா? டிடிவி தினகரன் கேள்வி
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி...
ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் சென்னைக்கு வந்து பேச முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பின் செய்தியாளர்களுடன் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,
"தேசிய ஜனநாயகக் கூட்டணி தில்லியில் பாஜக தலைமையிலான கூட்டணி. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி, இபிஎஸ் தலைமை வகிக்கிறார்.
பாஜக ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல் சென்னைக்கு வந்து பேச முடியாது. இபிஎஸ், அமித் ஷாவிடம் பேசினார். தொகுதிகள் குறித்துப் பேசியிருக்கலாம்.
நாங்கள் அமித் ஷாவிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. பிகாரில் தேர்தலை எதிர்கொண்டு பாஜகவினர் எப்படி வெற்றி பெற்றார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒற்றுமையுடன் தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து பேசினோம்.
நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.
நாங்கள் தில்லிக்கு வந்தாலே முதல்வர் பயப்படுகிறார். தில்லியுடன் சரியான புரிதல் இல்லாமல் அவர்களுடன் சண்டையிடும்போது தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நாங்கள் எப்படி மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்றுத்தர முடியும்? 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 12 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு வழங்கி உள்ளது. தவறு செய்ததால்தான் தில்லியைக் கண்டு திமுக பயப்படுகிறது.
எங்கள் கூட்டணி முழுமையடைந்துவிட்டது. சசிகலாவை கூட்டணிக்குள் கொண்டுவரும் எண்ணமில்லை. திமுகவிற்கு ஒரே மாற்று அதிமுக தலைமையிலான கூட்டணிதான்" என்றார்.