தவெகவுக்கு ஆதரவா? காணாமல்போன எம்எல்ஏவுடன் டிடிவி தினகரன் பேட்டி!
தவெகவுக்கு அமமுக எம்எல்ஏ ஆதரவு அளிப்பதாக ஆளுநரிடம் வழங்கப்பட்ட கடிதம் மோசடியானது என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டப்பேரவை உறுப்பினர் பெயரில் ஆளுநரிடம் வழங்கப்பட்ட ஆதரவு கடிதம் மோசடியானது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக சார்பில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஆதரவு கடிதங்களை ஆராய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
அமமுக எம்.எல்.ஏ.வை காணவில்லை என ஆளுநரை நேரில் சந்தித்து டிடிவி தினகரன் இரவு (மே 8) புகார் அளித்திருந்தார். இதனிடையே காணாமல்போன எம்.எல்.ஏ.வுடன் மீண்டும் இன்று (மே 8) நள்ளிரவு 12 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு டிடிவி தினகரன் வருகைப்புரிந்தார்.
Advertisement
Advertisement
அப்போது செய்தியாளர்களுடன் டிடிவி தினகரன் பேசியதாவது:
''தவெக சார்பில் ஆளுநர் மாளிகையில் வழங்கப்பட்டது மோசடி கடிதம். தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காமராஜ் வழங்கியதாக ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட கடிதம் மோசடியானது.
ஆளுநரிடம் தவெக வழங்கிய கடிதத்துக்கும் எங்கள் எம்.எல்.ஏ.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளேன். போலி கடிதம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்படும்.
காமராஜ் பெயரில் இருந்து வாட்ஸ்ஆப்பில் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றனர். என் கட்சி எம்.எல்.ஏ. பெயரில் வாட்ஸ்ஆப்பில் கடிதம் அனுப்பியது யார்? ஆளுநரிடம் தவெக வழங்கிய அனைத்து ஆதரவுக் கடிதங்களையும் ஆராய வேண்டும்.
தூய சக்தியான தவெக இவ்வாறு செய்வது நியாயமா? ஆட்சி தொடங்குவதற்கு முன்பே குதிரை பேரத்தில் ஈடுபடலாமா? '' எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.