தொகுதி மறுவரையறை; பேரவையில் தவெக அரசின் தீர்மான நாடகம் அம்பலம்: டிடிவி தினகரன்
தொகுதி மறுவரையறை விவாகரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளது பற்றி...
தொகுதி மறுவரையறை விவாகரத்தில் பேரவையில் தவெக அரசு நடத்திய தீர்மான நாடகம் அம்பலமாகியுள்ளதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன்தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே உள்ள கோவளத்தில் இன்று (ஆக. 20) நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மற்றும் தென்மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் உரையாற்றினார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டில் மாற்றமா? – தமிழகத்தின் தலையாய பிரச்னைகளைத் திசைதிருப்ப சட்டப்பேரவையில் தவெக அரசு நடத்திய “தீர்மான நாடகம்” அம்பலமாகியுள்ளது. சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி தவெக தோழமைக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தையும் நிறைவேற்றிய முதல்வர் ஜோசப் விஜய், ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியிருப்பது முற்றிலும் முரண்பாடாக அமைந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றாமல் விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அதுகுறித்து அடுத்தடுத்து கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி தவெக அரசு நடத்திய நாடகம், முதல்வர் ஜோசப் விஜய்யின் இன்றைய உரையின் மூலமாகவே அம்பலமாகியுள்ளது.
தொகுதி மறுவரையறையால் மாநிலங்களுக்கான, குறிப்பாக தமிழ்நாட்டின், மக்களவைப் பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என ஏற்கனவே உறுதியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையிலேயே, முதல்வர் ஜோசப் விஜய் அதே கோரிக்கையை முன்வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்துவிட்டு, அடுத்த வாரத்தில் அதே கோரிக்கையை முன்வைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கடுத்த வாரமான இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் மூலம், வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு தான் என்ன? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் தலையாய பிரச்னைகளைத் திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற அவசியமற்ற தீர்மானங்களை சட்டப்பேரவையில் முன்வைப்பதை விட்டுவிட்டு, தமிழகம் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
AMMK General Secretary TTV Dhinakaran has stated that the drama surrounding the resolution moved by the TVK government in the Assembly regarding constituency delimitation has been exposed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.