தவெகவுக்கு ஆதரவில்லை; அமமுகவின் எம்எல்ஏ புதுச்சேரி விடுதியில் உள்ளார்! - டிடிவி தினகரன் அறிவிப்பு!
தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம்...
தவெக ஆட்சி அமைப்பதற்கு அமமுக ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 107 இடங்களைக் கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவின் மூலம் 116 எம்எல்ஏ-க்களின் ஆதரவை தவெக தலைவர் விஜய் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 2 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தவெகவுக்குத் தேவைப்படுகின்றன.
Advertisement
இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க ஆதரவளிக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை (மே 8) மாலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது.
அடிப்படை ஆதாரமற்றது. அமமுகவின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ் அவர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர்கள் தங்கியிருக்கும் புதுச்சேரி தனியார் விடுதியிலேயே தங்கியிருக்கிறார்.
எனவே, ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகப் போற்றப்படும் ஊடகங்களும், பத்திரிகைகளும் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் உணர்ந்து இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, அமமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே அங்கம் வகிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.