ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக டிரம்ப் அறிவிப்பு
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தியைக் மற்ற நாடுகளும் கண்காணிக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை ட்ரூத் சமூக வலைத்தளத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.
அதில், ஈரான் போரின் முக்கிய கட்டத்தை அமெரிக்கா நெருங்கிவிட்டது. எனவே, எப்போது வேண்டுமானாலும் ஈரான் போர் முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்திருந்தார்.
அதாவது, ஈரானுடனான போரின் முக்கிய இலக்கை அடைந்துவிட்டோம், எனவே, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துகள் சுமூகமாக நடைபெறுவதை அமெரிக்கா தவிர, மற்ற உலக நாடுகளும் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது இருப்பது போலவே, மற்ற நாடுகள் இருக்கக் கூடாது. ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய தலைமையேற்க வேண்டும்.
ஹோர்முஸ் நீரிணை வழியைப் பயன்படுத்தும் பிற நாடுகள் அதன் பாதுகாப்பை கண்காணித்துக் கொள்ளவேண்டும். இனி அமெரிக்கா அதனை கண்காணிக்காது. மற்ற நாடுகள் கேட்டுக் கொண்டால், அமெரிக்கா உதவிகளை செய்யும். ஆனால், நிலைமை சீராக இருந்தால், அதுபோன்ற உதவிகள் எதுவும் தேவைப்படாது.
வளைகுடா போர் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் கட்டுப்பாடு காரணமாக, பல எண்ணெய்க் கப்பல்கள் எரிபொருள் விநியோகம் செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரான் கச்சா எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா அனுமதித்திருக்கும் நிலையில், இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.