சூரியன் வழிபடும் ஈஸ்வரர்!
இத்தலத்தில் சித்திரை 1ஆம் தேதி சூரிய பகவான் ஸ்ரீபதஞ்சலீஸ்வரரின் திருமேனியில் பட்டு இறைவனை வணங்குதல் கண்கொள்ளாக் காட்சி.
தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவேரி வடகரைத் தலங்களில் 32வது தலமாக விளங்குவது ""திருக்கானாட்டம்புலியூர்''. சுந்தரர் பாடல் பெற்றது. "திருக்கானாட்டு முள்ளூர்' என்ற பெயர் கொண்ட இத்திருத்தலம் காலப்போக்கில் மருவி "கானாட்டம்புலியூர்' என்று அழைக்கப்படுகிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தல யாத்திரையாக கொள்ளிடக் கரையை அடைந்தபோது இத்தலத்து இறைவன் அவருக்கு காட்சி தந்தருளினான். மேலும் பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமானை தரிசித்த பின் நந்தி தேவரின் வழிகாட்டுதலுடன் கானாட்டுமுள்ளூருக்கு வந்து தவமியற்றி முக்தி பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
பதஞ்சலி முனிவருக்கு இறைவன் அருள் செய்ததால் இத்தல இறைவன் பதஞ்சலி ஈஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பதஞ்சலி முனிவரை விக்ரக வடிவில் இங்கு தரிசிக்கலாம். அம்மனின் திருநாமம் ஸ்ரீகானார்குழலி மற்றும் கோல்வளைக் கையாள்.
இத்தலத்தில் சித்திரை 1ஆம் தேதி சூரிய பகவான் ஸ்ரீபதஞ்சலீஸ்வரரின் திருமேனியில் பட்டு இறைவனை வணங்குதல் கண்கொள்ளாக் காட்சி. சூரிய புஷ்கரணி தல தீர்த்தமாகவும், வெள்ளெருக்கு தல மரமாகவும் அமைந்துள்ள அற்புதத் தலம் இது. கல்வெட்டுக் குறிப்புகளின்படி இக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.
இக்கோயிலின் பிரம்மாண்ட மதில் சுவர்கள் சிதிலமடைந்துள்ளன. ராஜகோபுரம், விமானங்கள் போன்றவை பழுது பார்க்க வேண்டிய நிலையில் உள்ளன. சிவனேய செல்வர்கள் கிராம மக்கள் ஒத்துழைப்போடு திருப்பணி தொடங்கியுள்ளனர்.
தகவலுக்கு: 98400 53289/ 97903 33377.
இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் பேருந்து சாலையில், "மோவூர்' தாண்டி, முட்டம் கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலத்தை அடையலாம்.