திருநெல்வேலியிலிருந்து மேலப்பாளையம் தருவைபிரான்சேரி வழியாக சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது மேலச்செவ்வயல் என்ற மேலச்செவல் கிராமம். இங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் பாபநாசம் பிரதான சாலையில் கொழுமடை என்ற ஊரின் தெற்குப் பகுதியில் உள்ளது புராதனமான சாஸ்தா கோயில். இங்கு மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார்.
சட்டநாதர் என்கிற யோகீஸ்வரர் வழி வந்த சித்தர் ஒருவர் இறையருளால் தாமிரவருணி நதிக்கரையில் கீழச்செவலின் கரையில் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு சுயம்புலிங்கத்தையும், அதனுள் சாஸ்தாவின் ரூபத்தையும் வெளிப்படுத்தினாராம். பல வருடங்களுக்குப் பிறகு வயலை உழும்போது கலப்பை குத்தியதால் சுயம்புலிங்கத்திலிருந்து குருதி வடிந்ததாம். இதன்மூலம் சாஸ்தா தன்னை காண்பித்தார் என்பது வரலாறு. இந்த மூர்த்தியின் ரூபம் மிகவும் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த சாஸ்தா ஆதிசாஸ்தா என்றும், ஸ்ரீசட்டநாதர் தர்மசாஸ்தா என்றும் அழைக்கப்படுகிறார்கள். பல குடும்பங்களும் குல தெய்வமாக வழிபடுகின்றனர்.
கொழுமடை தர்மசாஸ்தா கோயிலில் நித்யபூஜைகளுடன், விசேஷ பூஜைகள் தமிழ் வருடப் பிறப்பன்றும், மாதந்தோறும் கடைசி சனிக் கிழமையும் நடைபெறுகிறது. இதைத் தவிர சித்திரை விஷு, ஆவணி அவிட்டம், தீபாவளி, கிருத்திகை, பௌர்ணமி, மண்டல பூஜை, பங்குனி உத்திரம் போன்ற தினங்களும் இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
இவ்வருடம் கார்த்திகை முதல் நாளிலிருந்து (நவம்பர் 17ஆம் தேதி),மார்கழி 12 ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற்று கொழுமடை தர்ம சாஸ்தாவுடைய அவதார நாளான டிச: 12ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
தகவலுக்கு: 97893 84472
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.