விளக்கு ஏற்றுவது எதற்காக?
கடவுள் படங்களின் முன்னால் அல்லது பூஜை அறையில் என்று தினமும் இல்லங்களில் விளக்கு ஏற்றப்படுகிறது.
கடவுள் படங்களின் முன்னால் அல்லது பூஜை அறையில் என்று தினமும் இல்லங்களில் விளக்கு ஏற்றப்படுகிறது. விளக்கு ஒளி, அகன்ற அறிவைக் காட்டுவது. இருள் அறியாமையைச் சுட்டுவது. கடவுள் என்பவர் பேரறிவாளர். அறிவின் மூலம். அவரே அறிவு கிடைப்பதற்கான மார்க்கம். நாம் அறிவினைப் பெறுவதற்கான தூண்டுகோல். நம் அறிவுச் சுடரை ஏற்றுபவரும் அவரே. எனவே, ஒளியை உமிழக் கூடிய விளக்கினை ஏற்றுவது என்பது, அறிவை நல்கும் ஆண்டவனை வழிபடுவது என்பதாகும்.
விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. விளக்கு ஏற்றுவதன் தாத்பரியம் என்று சொல்லப்படுவது... விளக்கில் எரிவதற்காக ஊற்றப்படும் எண்ணெய் அல்லது நெய் என்பது, நம் உள்ளத்துள் உறையும் இருள் எண்ணங்களை வெளிப்படுத்தும். ஜன்ம வாசனையை உணர்த்தும் நம் அகங்காரத்தை அடையாளப்படுத்தும். அந்த எண்ணெய் அல்லது நெய் எரிவது என்பது, நம் அகங்காரமும் எதிர்மறை எண்ணங்களும் மாய்வதற்கு ஒப்பாகும். எண்ணெய் திரியின் மூலம் எரிந்து வெளிச்சம் பெறுவது என்பது, "நான்' என்ற அகங்காரம் மாய்ந்து, உள்ளத்து ஒளி வெளியே பரவுவதற்கு ஒப்பாகும். திரியில் எரியும் சுடரானது எப்போதும் மேல்நோக்கியே எழும்பும். அதுபோல், நம் அகங்காரம் எரிந்து பரவும் உள்ளொளியானது, அறிவானது, உயர்வை நோக்கிய உன்னத அறிவாற்றலை வெளிப்படுத்தும்.
எனவே, நாம் விளக்கு ஏற்றும்போது பிரார்த்தனை செய்ய வேண்டியது...
Advertisement
Advertisement
"தீபஜ்யோதி பரப்ரஹ்ம தீப சர்வ தமோபஹ:
தீபேன சாத்யதே சரம் சந்த்யா தீபோ நமோஸ்துதே''
"காலை மாலை வேளைகளில் நான் ஏற்றும் இந்த தீபத்தால், பேரொளியை வணங்குகிறேன். அது என் அறியாமை இருளை அகற்றி, வாழ்வில் அனைத்தையும் அடைவதற்கு வழிகாட்டட்டும்'' என்பது இதன் பொருள்.
இந்தப் பிரார்த்தனையை ஒட்டிப் பார்த்தோமானால், நம் பண்டைய மரபில் அறிவை அறிவுச் சுடர் என்று விளக்குக்கு ஒப்பிடுவதைப் போல், சூரியனின் பிரகாசிக்கும் ஒளிக்கும் ஒப்பிடுவதுண்டு. காரணம் இருள் அகற்ற ஒளி பயன்படுதல்போல், அறியாமையை அகற்ற அறிதல் எனும் அறிவு தேவைப்படுகிறது.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் தம் திருப்பள்ளியெழுச்சியில்,
கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
கனவிருள் அகன்றது காலையம்பொழுதாய்
என்று பாடியிருக்கிறார்.
பாரதியார் தம் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சியில்...
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மையிருட்கனம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவு எனும் இரவி...
என்று அறிவை சூரியனுக்கு ஒப்பிடுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.