இறைவனோடு உறவு...
வீடு என்று ஒன்று இருந்தால் அதற்கு வாசற்படி என்று ஒன்று இருக்கும்.
வீடு என்று ஒன்று இருந்தால் அதற்கு வாசற்படி என்று ஒன்று இருக்கும். இதேபோல் உறவு என்று ஒன்று இருந்தால் உரசல்களும் விரிசல்களும் இருக்கத்தான் செய்யும். அதேபோல இறை -மனித உறவிலும் ஏமாற்றங்கள், விரிசல்கள், போராட்டங்கள் ஏற்படுவது சகஜமே. இதனை ஜெபத்தின் வழியாக இறைவனோடு நாம் பேசி நமது மன்றாட்டுகளையும் வேண்டுதல்களையும் சமர்ப்பித்தால் தனது பேரன்பில் நம்மை மலரச் செய்வார் இறைவன். அதாவது நமக்குத் தேவையான சந்தோஷத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தருள்வார் என்பது நிச்சயம்.
ஏன் இந்த இறைவன் எனது விண்ணப்பங்களை மட்டும் ஏற்பது இல்லை? ஏன் எனது தேவைகளை மட்டும் புரிந்து கொள்ள மறுக்கின்றார் என்று எத்தனையோ முறை நாம் புலம்பியிருக்கக்கூடும்.
அதிலும் சிறப்பாக இறைபக்தியிலும், ஞானத்திலும் இறைவனோடு உறவு கொண்டவர்களே இறைவனுடன் அதிகம் போராட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதற்கு மிக மிகச் சிறந்த உதாரணம் யோபுவின் கதைதான். யோபு இறைவனோடு எத்தனையோ முறை போராடினார். ஆனாலும் அவர் தளர்ந்துபோய் விடவில்லை. தனது நம்பிக்கையை இழக்கவில்லை. அன்பு... அன்பு ஒன்றே பிரதானமாகக் கொண்டிருந்தார். இறுதியில் வெற்றியும் பெற்றார். இறைவனின் உன்னதமான உறவைப் புரிந்து கொள்ள மனிதனும் போராடத்தான் வேண்டும்.
எளிதாகக் கிடைக்கும் செல்வம் நீண்ட நாள்கள் நிலைத்திருக்காதல்லவா? உண்மையான உழைப்பால் வந்த செல்வம்தான் நீடித்திருக்கும். அது போலத்தான் அன்பும். இறைவன் மீது நாம் காட்டும் உண்மையான அன்புக்குச் சோதனைகள் பல வரலாம்.
ஆனாலும் நமது அன்பு உண்மையானதாகவும் நீடித்ததாகவும் இருக்குமானால் அன்பும் நீதியும் என்றாவது ஒருநாள் மலர்ந்து ஆட்சி செய்யும்.
இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது வேதனை தாங்காமல், "கூடுமானால் இந்தத் துன்பக்காலம் என்னை விட்டு அகலட்டும்' என்றார். இறைமகனுக்கே இந்த நிலை என்றால் மனித நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இறைவா எதை வேண்டுமானாலும் கொடும். துன்பம் மட்டும் கொடுத்துவிடாதீர் என்று வேண்டுவது பலரின் வேண்டுதலாகும்.
இறை -மனித போராட்டம் என்பது நம்மை பலவீனப்படுத்திக் கொள்ள அல்ல. மாறாக நமது உறவை பலப்படுத்திக் கொள்ளத்தான்.
நாம் விழிப்போடு இருந்து எங்கே எப்படி இறைவன் உறவுப்பாலம் அமைக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளத் தேவையான தவமுயற்சிகளை ஏற்போம். தானதர்மங்களைப் பகட்டாக அல்ல, மறைவாக உதவிசெய்து பலம் சேர்ப்போம். செபம், தவம், தர்மம் ஆகிய மூன்று வழிகளில் இறை மனித உறவை வளர்த்தெடுப்போம்.