வெள்ளிமணி

ஆறுமுகன் அருளும் பெரும்பேறு

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கத்தை அடுத்து, தொழுப்பேடு அருகில் சாலையின் வலது பக்கம் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். 

கி.ஸ்ரீதரன்

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கத்தை அடுத்து, தொழுப்பேடு அருகில் சாலையின் வலது பக்கம் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.  இவ்வூர் பெரும்பேறுகண்டிகை என அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், அச்சரப்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. பெரும்பேறு  தொன்மையான ஊர். இங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கால தொல்பொருள்கள் பல கிடைத்துள்ளன. இனி கோயிலைக் காணச் செல்வோம்:

கோயில் அமைந்துள்ள குன்று "சஞ்சீவிமலை' என்றும், மகாமேரு மலைத்தொடரின் ஒரு பகுதி என்றும் அறியப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் சக்தி வாய்ந்த எல்லையம்மன் கோயில்  அமைந்துள்ளது. இக்கோயில் இப்பகுதி மக்களால் சிறப்பாகப் போற்றி வழிபடப்படுகிறது. பலருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறது. இதன் அருகில் உள்ள குளம் "சஞ்சீவி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது.

மலைக்குச் செல்வதற்கு முன்னர் பாறையில் செதுக்கப்பட்டு புடைப்பு சிற்ப வடிவில் விளங்கும் பிள்ளையாரையும், நவகிரக சந்நிதியையும் வழிபடலாம். சிறிய குன்றுதான். 100 படிகள் உள்ளன. படிகளில்  ஏற முடியாதவர்கள் வாகனத்தில் திருக்கோயில் வரை செல்ல பாதை அமைத்துத் தந்துள்ளனர். திருக்கோயில் திருச்சுற்றில் தென்மேற்கிலும், வடமேற்கிலும் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன.

கருவறையில் சுப்ரமணியர் வள்ளி - தெய்வானையுடன் காட்சி தந்து அருள்புரிகின்றார். திருச்செந்தூரில் சூரசம்காரம் முடிந்து முருகப்பெருமான் இங்கே எழுந்தருளியதாக புராண வரலாறு கூறுகிறது.  முருகப்பெருமான் தேவியர்களுடன் தெற்கு நோக்கி எழுந்தருள்வது சிறப்பு. அகத்தியர் பெருமானுக்காக தெற்கு நோக்கியுள்ளதாக தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்தை அருணகிரிநாதர் பெருமான் தமது திருப்புகழில் "பேடை மடவோதி மங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே'' என்று போற்றுகின்றார். பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச  சுவாமிகள் இத்தலத்தைப் போற்றி "பெரும்பேறு பதிகம்' பாடியுள்ளார். எனவே இத்தலம் பேறை நகர், பெரும்பேறு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள தான்தோன்றீசுவரர் கோயில் கல்வெட்டில்  பெரும்பேறூர் என்றும், ""திரிபுவனநல்லூர்'' என்றும் சிறப்புடன் பொறிக்கப்பட்டுள்ளது.

கருவறை விமானத்தில், முருகன் கோயில் கொண்டு விளங்கும் அறுபடை வீடு தொடர்பான நிகழ்ச்சிகள் சுதை சிற்பமாக உள்ளன. அதன் பெயர்களும் எழுதப்பட்டுள்ளது சிறப்பு. இயற்கை சூழலுடன்  காட்சி தரும் இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி, படிவிழா, அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபத் திருவிழா, மாசி கார்த்திகையில் பால் குடம், மாசி  மகம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன.

புன்னகை தவழும் ஆறுமுகங்களுடன் சுப்ரமணியர், வள்ளி - தெய்வானையுடன் காட்சி தந்து அருள்புரியும் "பெரும்பேறு' திருக்கோயிலுக்குச் சென்று வழிபட வாழ்வில் அனைத்துப் பேறுகளையும்  அடையலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT