முகப்பு
வெள்ளிமணி

சக மனிதனுக்குதவு!

ஒருவன் செல்வந்தராகப் பிறப்பது இறைவன் அவனுக்களித்த மாபெரும் கொடையாகும். நம் தகுதியின் பொருட்டு நமக்கு இவ்வுலக செல்வங்கள் கிடைக்கப்பெறுவதில்லை.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

ஒருவன் செல்வந்தராகப் பிறப்பது இறைவன் அவனுக்களித்த மாபெரும் கொடையாகும். நம் தகுதியின் பொருட்டு நமக்கு இவ்வுலக செல்வங்கள் கிடைக்கப்பெறுவதில்லை.

உலகில் எத்தனையோ ஆயிரம்பேர் வறுமையில் உழன்ற போதிலும் நமக்கு இறைவன் செல்வங்களைத் தேவைக்கதிகமாக அளித்திருக்கிறார் என்றால் அவற்றைப் பிறரோடு பகிர்ந்துண்ணவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

வசதியில் குறைந்த வறியோருக்கு நாம் உதவி செய்ய மறந்தபோது அல்லது மறுக்கும்போது இறைவன் பார்வையில் நாம் பெரிய குற்றவாளிகளாகக் கருதப்படுகிறோம். இதையே பைபிளில் காணப்படும் ஒரு நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலை உயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.

அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய் சேர்த்தார்கள்.

செல்வரும் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர், பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது தொலைவில் ஆபிரகாமையும், அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

அவர், "தந்தை ஆபிரகாமே! எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்!'' என்று உரக்கக் கூறினார்.

இதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார். நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்!'' (லூக்கா 16: 19-25)

மேலே காணப்படும் இந்த நிகழ்வில் நம்மை வியக்க வைப்பது எது? அந்த செல்வந்தன் எந்தவொரு பெரிய குற்றம் புரிந்ததாகவும் கூறப்படவில்லை. அப்படியானால் பாதாளத்தில் புதைக்கப்படக் கூடிய அளவுக்கு அவன் செய்த குற்றம்தான் என்ன? அருகிலுள்ள தன் சக மனிதன் படும் வேதனையையும், அவன் பசிப்பிணியால் அல்லலுற்றதையும் கண்டு கொள்ளாமல், தான் மட்டும் சுயநலத்தோடு ஆடம்பர வாழ்க்கை நடத்தியது ஒன்றேதான்.

எனவேதான் தேவையில் உழலும் சின்னஞ்சிறிய சகோதரருக்கு நாம் உதவக் கடமைப் பட்டிருக்கிறோம் என்னும் மாபெரும் உண்மையை நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

அவர்களுக்குச் செய்யும் உதவி இறைவனுக்கே செய்யும் உதவியாகக் கருதப்பட வேண்டும். இவ்வாறு பகிர்ந்துண்டு வாழ்ந்தோமெனில் இவ்வுலகில் துன்பம் எது? துயரம் எது? இன்பமே எப்போதுமே!

முழு கட்டுரையைப் படிக்க →