திரு இருதய வணக்க மாதம்!
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இரு முக்கியமான மறையுண்மைகளில் அடக்கி விடலாம். அவை
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை இரு முக்கியமான மறையுண்மைகளில் அடக்கி விடலாம். அவை, (1) இறையன்பு, (2) பிறரன்பு என்பவையாகும். அன்பே கடவுள், கடவுளே அன்பு என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே இயேசுவின் திருவுருவப்படமானது இதயம் வெளிப்படையாகத் தெரியுமாறு வரையப்படுகிறது.
இயேசுவின் திருவுருவப் படங்கள் இல்லாத கிறிஸ்துவ வீடுகளே இல்லை எனலாம். புதிய வீடுகளில் குடிபுகும் கிறிஸ்துவர்கள் முதன் முதலில் இயேசுவின் திரு இருதயப் படத்தையே ஸ்தாபித்து வணங்குவர். ""என்னுடைய இருதயப்படம் ஸ்தாபித்து வணங்கப்பட்டு வரும் வீடுகளில் உள்ளவர்கள், ஒருநாளும் அவலமாகச் சாகமாட்டார்கள்'' என்று, இயேசு, மார்கரீத் என்னும் புனிதைக்கு வாக்குக் கொடுத்துள்ளார் என்பதும் இதற்குக் காரணமாயிருக்கலாம்.
சிறப்பாக, ஜூன் மாதங்களில் திரு இருதயப் படங்களை மந்திரிக்குமாறு குருக்கள் வீடுகளுக்கு அழைக்கப்படுகிறார்கள். இதனால் ஜூன் மாதம் திரு இருதய வணக்க மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேவாலயங்களில் இயேசுவின் திரு இருதய அன்பை நினைவுகூரும் விதமாக சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
இயேசுவின் அன்பை நினைவுபடுத்தும் விதமாகத்தான் உலகெங்கிலுமுள்ள கிறிஸ்து அமைப்புகள் பலவும் பிறரன்புப் பணிகளில் ஈடுபடுகின்றன. ஏனெனில் பைபிளில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ""மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் நான் பசியில் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; நான் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்!' (மத்தேயு 25: 35,36,40)
அன்னை தெரசா அவர்கள், கல்கத்தா நகர வீதிகள் எங்கும் நோயுற்றோரையும், சாவின் விளிம்பில் இருப்போரையும் தேடிச் சென்று உதவிகள் செய்ததை நாம் மறக்க இயலுமா? கிறிஸ்து போதித்த அன்பு எனும் தத்துவமே அவரது செயல்களுக்கு உந்துகோலாக அமைந்தது என்பதை அவரது வாய்மொழியாகவே நாம் கேட்டிருக்கிறோமல்லவா?
சென்னையில் எழும்பூரிலுள்ள திரு இருதய ஆண்டவர் கோயிலும், சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் கோயிலும், கொடைக்கானலிலுள்ள திரு இருதய ஆண்டவர் கோயிலும் தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றன. நாமும் திரு இருதய ஆண்டவர் மூலம் அன்புப் பணிகளைச் செய்யும் ஆற்றல் பெறுவோமாக.