சங்கடங்கள் போக்கும் சங்கட் மோர்ச்சன்!
காசியில் உள்ள சங்கட் மோர்ச்சன் அனுமன் ஆலயம் பலவகைகளிலும் பெருமை வாய்ந்தது
காசியில் உள்ள சங்கட் மோர்ச்சன் அனுமன் ஆலயம் பலவகைகளிலும் பெருமை வாய்ந்தது. காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள நிலத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம். தற்போது காணப்படும் ஆலயம் 1900 ஆம் ஆண்டுகளில், இந்தப் பல்கலைக்கழகத்தைத் துவங்கிய பண்டிட் மதன்மோகன் மாளவியாவால் கட்டப்பட்டதாகும்.
கர்ப்பகிரகத்தினுள் அனுமன் கம்பீரமாக நின்ற கோலத்தில் எப்பொழுதும் செந்தூரம் தரித்துக் கொண்டு காட்சியளிக்கிறார். ஜாதகத்தில் சனி கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து மனதார வேண்டினால், நிவர்த்தியாகிவிடும் என்ற அசையாத நம்பிக்கையுண்டு. அதை நிரூபணம் செய்வதுபோல் செவ்வாய், சனிக்கிழமைகளில் இவ்வாலயத்தில் பெருங்கூட்டம் கூடுகிறது.
மகான் துளசிதாஸருக்கு இந்த அனுமன் அனுக்கிரகித்து காட்சியளித்திருக்கிறார். அதனால் அனுமன் சாலீஸô என்னும் தோத்திரத்தை செய்ததாகத் தெரியவருகிறது. மேலும் பக்தர்கள் இந்த அனுமன் சந்நிதியில் துளசிதாஸரின் அனுமன் சாலீஸô மற்றும் ராமாயண சுந்தர காண்டத்தை பயபக்தியுடன் பாராயணம் செய்கிறார்கள். இங்கு நடக்கும் விழாவில் முஸ்லிம் இசைக்கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்! இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு சங்கட் மோர்ச்சன் அனுமன் ஆலயம் ஒரு முன்னுதாரணம் என்றால் மிகையாகாது.
Advertisement