சென்னை, தண்டையார்பேட்டை மார்கெட் அருகில் உள்ளது தணிகை சுப்ரமணியர் திருக்கோயில். கடற்கரை அருகில் "தணிகை' சுப்ரமணியர் கோயில் என்ற பெயரில் அமைந்தாலும் "செந்திலுக்கு' நிகரானது என்று பக்தர்கள் போற்றுகின்றனர். சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் அடிக்கடி திருத்தணி சென்று முருகனை தரிசித்து வருவது வழக்கமாம். அவரது ஆவலால் இங்கு எழும்பியதே தணிகை முருகன் திருக்கோயிலாகும்!
சிறிய கோயிலானலும் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமி பிரதான தெய்வமாக கருவறையில் எழுந்தருளியிருக்க, பிற தெய்வங்களுக்கும் சந்நிதிகள் அமையப் பெற்றுள்ள அழகான ஆலயம் இது. திருமணப் பிராப்தி, மகப்பேறு, செவ்வாய் தோஷ நிவர்த்தி போன்றவைகளுக்காக இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வருவதும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறியபின் இங்கு வந்து நன்றிக்கடன் செலுத்துவதும் கண்கூடு. ஆரவாரம் இன்றி ஆடம்பரம் இன்றி அதேசமயம் அருளுக்கு குறைவின்றி இங்கே அருளாட்சி செய்கிறான் முருகன்!
மாதாந்திர பிரதோஷங்கள், ஆடியில் அம்மனுக்கு வளைகாப்பு, தீபாவளியை ஒட்டிவரும் மகா கந்தசஷ்டி விழா, ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் போன்றவைகள் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.
மேலும் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் கந்தன் திருக்கல்யாண வைபவம் இங்கு வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. தினசரி காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5.30 முதல் 8.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்காக ஆலயம் திறக்கப்பட்டிருக்கும் என்றும் வாழ்வில் ஒரு முறையாவது பக்தர்கள் வந்து இந்த தணிகை வேலனை தரிசிக்க வேண்டும் என்று ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
தகவல்களுக்கு: 99401 18908.
- எம். கதிரேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.