திருநள்ளாரில் அருள் புரியும் சனிபகவான்!
அற்புதமான அந்த அரண்மனை கொலுமண்டபத்திலே தமயந்தியின் சுயம்வரத் திருமணம் நடந்தேறியது.
அற்புதமான அந்த அரண்மனை கொலுமண்டபத்திலே தமயந்தியின் சுயம்வரத் திருமணம் நடந்தேறியது. நளனை மணந்து கொண்ட தமயந்தி, மனமகிழ்ச்சியுடன் நளனுடன் கைகோர்த்துக்கொண்டு மணமாலை சகிதமாய் மணிமண்டபத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். தமயந்தியின் சுயம்வரத் திருவிழாவில் தானும் பங்கேற்று தமயந்தியை அடைய வேண்டும் என்ற ஆவலோடு எதிரே சற்றுத் தொலைவில் சனீஸ்வர பகவான் வந்துகொண்டிருந்தார். சனீஸ்வரனின் ஒரு கால் ஊனமாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுயம்வரத்துக்கு வரமுடியாமல் போனது.
இப்போது சுயம் வரம் முடிந்து நளனும் தமயந்தியும் எதிரே வருவதைக் கண்டார். தமயந்தி தமக்கு கிடைக்காமல் போனதால் வேதனையும் கோபமும் கொண்டு அப்படியே நின்றுவிட்டார். நளனும் தமயந்தியும் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தமாகச் சிரித்தபடி சனீஸ்வரனை கண்டும் காணாமலும் சென்றனர்.
சனீஸ்வரனுக்கு ஏற்கெனவே தமயந்தி தனக்குக் கிடைக்கவில்லை என்ற கோபம் ஒருபுறம் இருந்தது. இப்போது அந்தக் கோபம் மேலும் அதிகரித்தது. இவர்கள் இருவரையும் தனது ஆட்சி காலம் வரும்போது ஆட்டிப் படைக்கலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து வெளியேறினார் சனீஸ்வரன்.
Advertisement
நிடத நாட்டை ஆளும் மன்னன் நளன், தன் பட்டத்தரசி தமயந்தியுடன் சில வருடங்கள் நல்லாட்சி செய்து வந்தான். சனிபகவானுக்கு அவர்கள் இருவரையும் ஆட்டிப்படைக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. இறைவனை பூஜிப்பதற்காக பாதத்தில் தண்ணீர் ஊற்றி கழுவ முனைந்த நளன், சரிவரக் கழுவாமல் பூஜைக்கு சென்றமர்ந்தான். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சனிபகவான், நளனின் இடது கால் பாதத்தைப் பற்றிக்கொண்டான்.
சனியின் பிடியால் நளனின் நல்வாழ்வு நலிவுற்றது. தொட்டதெல்லாம் கெட்டது. புத்தி மழுங்கியது. சூதாடி நாடு நகரத்தை இழந்தான். கட்டிய மனைவி தமயந்தியுடன் காட்டுக்குச் சென்றான். காட்டிலே நளனும் தமயந்தியும் பட்டபாடு சொல்லி மீளாது. நிறைய துன்பங்களை அனுபவித்தனர். ஒருநாள் இரவு தமயந்தியை தவிக்கவிட்டு போய்விட்டான். இருவரையும் சனீஸ்வரன் பிரித்துவிட்டான்.
காட்டுக்குள் தீயில் மாட்டிக்கொண்ட கார்கோடகன் என்ற நாகத்தைத் தீயிலிருந்து காப்பாற்றினான் நளன். ஆனால் அந்த நாகம் அவனைத் தீண்டியதால் கருநீல மேனியுடன் அடையாளமே தெரியாத அளவில் அலைந்து திரிந்தான் நளன். காட்டிலே விடப்பட்ட தமயந்தி பலதுன்பங்களை அடைந்து முடிவில் தன் தந்தையிடம் அடைக்கலமானாள். அதேநேரத்தில் வேற்று நாட்டரனுக்கு சமையல்காரன் ஆனான் நளன். இப்படியாக துன்பங்கள் அடைந்து இறுதியில் இருவரும் ஒன்று சேருகின்றனர்.
கார்கோடகன் கொடுத்த கம்பளியைப் போர்த்தியதும் சுயரூபம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வந்து அரசாளத் தொடங்கினான் நளன். ஆனாலும் மனக்கலக்கத்துடன் இருந்தான். நாரத மகரிஷி அறிவுரையின்படி சனிப்பிரீத்தி செய்ய தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். புண்ணிய நதிகளில் நீராடினான். பல மஹான்களைத் தரிசித்தான். இருப்பினும் மனக்கலக்கம் தீரவில்லை.
பரத்வாஜ முனிவரை சந்தித்து தன் மனக்கலக்கம் தீர வழிகேட்டான். அவரும், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு கூறினார். நளன் தன் மனைவி மக்களுடன் திருநள்ளாறு சென்று அங்கு நளகூபத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசித்து கருமை நிற வஸ்திரம் சார்த்தி, எள் அன்னம் நிவேதனம் செய்து எள் விளக்கேற்றி தம் பிழையை பொறுத்தருளவும், நல்வாழ்வு கிட்டவும் வேண்டிக்கொண்டான். சனிபகவானும் நளனுக்கு பேரருள் வழங்கினார்.
நளனின் இக்கதையை யார் சொன்னாலும், சொல்லக் கேட்டாலும், படித்தாலும் அவர்களுக்கு என்னால் அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராது. மாறாக, அவர்கள் மகிழ்ச்சியுடன் மனசஞ்சலமின்றி நல்வாழ்வு வாழ்வார்கள் என்று அருளினார்.
திருநள்ளாறு செல்பவர்கள் அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, விநாயகருக்கு முதல் வணக்கத்தைச் செலுத்தவேண்டும். அதன்பிறகு சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரையும் பிராணேஸ்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். பின்னர், தனிசந்நிதியில் வீற்றிருக்கும் சனீஸ்வரரை தரிசித்து அருள் பெற வேண்டும்.
இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின்போது திருநள்ளாறு சனிபகவானை வழிபட்டால் அப்பெருமான் அவர்களது தோஷங்களை நிவர்த்தி செய்து சகல நன்மைகளையும் செல்வங்களையும் வழங்கி அருள்புரிவார்.